
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்? தமிழ்நாடு அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிப்பாரா? – என்று, அரசின் பணத்தில் வெகுகாலம் இறுதி சிகிச்சை எடுத்துக் கொண்ட முரசொலி மாறன் மகனும், மத்திய அமைச்சராக இருந்த போது அரசின் பிஎஸ்என்எல் உயர் தர கண்ணாடி இழை தொடர்புகளை தன் சகோதரனின் சன் டிவிக்கு முறைகேடாக இலவசமாக பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகைக் கட்டணம், டீ மற்றும் காபி உட்பட உணவு, விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவும் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளுநர் குறித்து தயாநிதி மாறன் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது என்று- ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ராஜ் பவன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாண்புமிகு ஆளுநர் அவர்களின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திரு. தயாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் பொதுவெளியில் குற்றம்சாட்டியதாக மேற்கோள்காட்டி ஆகஸ்ட் 24, 2023 அன்று சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் தவறானவை என்பதுடன், விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால், நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும்.
நடந்த உண்மைகள்:
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிப்ரவரி 21 – 23, 2022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.
மாண்புமிகு ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.
- விருந்தினர்கள் மட்டுமன்றி மாண்புமிகு ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. •தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன் சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.
முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.
மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.
முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர்.
ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை.
- விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல் விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் மாண்புமிகு ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் மாண்புமிகு ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது.