திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு உள்ளான நிலையில், திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் வழித்தடம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடிச்சென்று விட்டது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார ரயில்வழித்தடம் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளது.
மின் எலக்ட்ரிக் போல் வயர்கள் பல இடங்களில் அறுந்து விழுந்து உள்ளது. இதனால் திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுபோல் திருநெல்வேலி – தென்காசி – செங்கோட்டை ரயில் வழித்தடத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி நகரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் தண்டவாளங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பழைய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பிற்பகுதியில் உள்ள பிரதான ஸ்வீட் ஸ்டால் ஹோட்டல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
பஸ் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழை தற்போது வரை இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் வயதானவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவி வருவதால் சுகாதாரத்துறை முடுக்கி விடப் பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞாயிறு நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சியிலும், மும்பை நாகர்கோவில் ரயில் திண்டுக்கல்லிலும், தாம்பரம் நாகர்கோவில் ரயில் கொடை ரோட்டிலும், பெங்களூர் நாகர்கோவில் மதுரையிலும், அனந்தபுரி ரயில் விருதுநகரிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18-12-2023 இன்று காலை 20683 தாம்பரம் செங்கோட்டை ரயில் விருதுநகரில் இருந்து ரயில் மாற்று பாதையில் சிவகாசி – ராஜபாளையம் – சங்கரன்கோவில் – தென்காசி வழியாக இயக்கப்பட்டது.
திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஓர் ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அதாவது நேற்று மட்டும் 96 செ.மீ பெய்துள்ளது.