அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக வழிபாட்டை தமிழகத்தில் கொண்டாடுவதை தடுக்க தமிழக அரசு செய்த முயற்சியை இந்து முன்னணி கண்டிக்கிறது என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகத்தில் உள்ள பக்தர்கள் காண்பதற்கும், பூஜைகள் , பஜனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்துவதற்கும் பல இடையூறுகளை தமிழக அரசு தனது ஏவல் துறையான காவல்துறை மற்றும் அறநிலையத்துறை மூலமாக செய்ததை கண்கூடாகக் காண முடிந்தது. இது அப்பட்டமான ஜனநாயக விரோதம். அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை, குடிமக்களின் வழிபாட்டு உரிமைகளை திட்டமிட்டு தடுப்பதும் ஆகும்.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி போல காவல்துறையை ஏவி மக்களை மிரட்டிய அநாகரிகமான செயல் நடந்தது, கோவில்களை பூட்ட வைத்து, பல இடங்களில் LED திரை வைத்த தொழிலாளிகளை அச்சுறுத்தி அகற்ற வைத்தது, மின்சாரத்தை துண்டித்தது என கேவலமான முறையில் ஈடுபட்டது இழிவான செயல்.
திமுகவின் கொள்கை இந்து விரோதமாக இருக்கலாம். அதற்காக அரசின் செயல்பாடு தமிழர்களின் விருப்பத்திற்கு, பக்தர்களின் உரிமைக்கு எதிராக இருப்பதும் , அவ்வாறு செயல்படுவதும் கண்டனத்திற்கு உரியது.
தமிழகத்தில் பல இடங்களில் பல போராட்டங்களுக்கு பிறகும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் காவல்துறையின் அச்சுறுத்தல் குறைந்தது.
பிரபல ஆன்மிக சொற்பொழிவாளரும் முன்னாள் பேராசிரியருமான திருமதி. சரஸ்வதி ராமநாதன் அவர்கள், தான் இருக்கும் ஊரில் கோவிலை சுற்றி சுவாமி ஊர்வலம் செல்ல நேற்று அனுமதிக்கவில்லை. பக்தர்களை அச்சுறுத்தி காவல்துறை தடுத்து நிறுத்தியதை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகளில் கூட சுவாமி ஊர்வலம் செல்க்கூடாது என்றால் நாம் எங்கே இருக்கிறோம்? என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.
தினமலர் துணிச்சலாக மக்கள் பிரச்சினையை செய்தியாக்கியது. தினமலரை நேரடியாக மிரட்டி தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் சர்வாதிகார பாசிச போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை கொண்டாட எந்தெந்த இடங்களில் காவல்துறை எழுத்துப்பூர்வமாக தடை விதித்துள்ளது என்பதை தக்க ஆதாரங்களுடன் தினமலர் வெளியிட்டது.
அதுபோல வாய்வழி உத்தரவு மூலமாக காவல்துறை அதிகாரிகள் மிரட்டிய ஆடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தது.
இவற்றையெல்லாம் மூடி மறைக்க முதல்வர் மிரட்டல் தொனியில் அறிக்கை வெளியிடுகிறார் என்றால், தமிழக முதல்வர் சுயநினைவில் ஆட்சி செய்கிறாரா அல்லது யாருடைய கைப்பாவையாக செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.
தினமலர் பத்திரிகையை தமிழக அரசு மிரட்டியதை பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டிக்கவில்லையே ஏன்? ஊடகத்தின் குரல் வளை நசுக்கும் போதுகூட அரசியல் சார்பு நிலையில் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இருப்பது வேதனையானது. இத்தகைய அராஜக போக்கு குறித்து ஊடகங்கள் கண்டிக்கவில்லை என்றால் ஆளுங்கட்சிக்கு ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கும் துணிச்சல் பிறக்கும் என்பதை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் சங்கங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நேற்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ராவண விழா என்ற நிகழ்ச்சியை சில இந்து விரோத,தேச விரோத அமைப்புக்கள் நடத்தினர். காவல்துறையின் எந்த அனுமதியும் பெறாமல் சாலைகளில் இந்நிகழ்ச்சி குறித்த போஸ்டர்கள் திடீரென ஒட்டி, பொது இடத்தில் மேடை அமைத்து நடத்தின. இந்து முன்னணி எதிர்ப்பின் காரணமாக பாதியில் அக்கூட்டம் நிறுத்தப்பட்டது. காவல்துறை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் போடவில்லையே ஏன்?
அதே சமயம் கோவையில் சில வீடுகளில் பட்டாசு மத்தாப்பு கொளுத்தி ராமர் ஆலய கும்பாபிஷேகத்தை கொண்டாடியதற்கு வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது எத்தகைய மக்கள் விரோத போக்கு?
திமுக பதவி ஏற்றதில் இருந்தே இந்த திமுக ஆட்சி யார் போட்ட பிச்சையில் வந்தது என்பதில் பெரிய போட்டியே அரங்கேற்றப்பட்டு வருகிறது.
மேலும் பிச்சைபோட்டவர்களாக பேசுபவர்களுக்கு சாதகமாக சட்டத்தின் கைகள் கட்டப்பட்டு காவல்துறை, அரசு அதிகாரிகள் பரிதாபகரமாக நிற்பதை பார்த்து வருகிறோம்.
கிறித்துவ மதமாற்ற கும்பல், இஸ்லாமிய பயங்கரவாதம், தேசவிரோத நக்சல் இடதுசாரி பயங்கரவாதம், இந்து விரோத நாத்திக கும்பல் என எல்லோரும் சுதந்திரமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பக்தியில் ஈடுபடும் ஆன்மீக அன்பர்கள் மீது கடும் நடவடிக்கை.
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தமிழக அரசு காவல்துறையை ஏவி பொய் வழக்கு போட்டு மிரட்டி மக்கள் உணர்வுகளை அடக்க நினைப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.