இலாகா இல்லாத அமைச்சர் பதவியுடன் சிறையில் காலம் கழித்து வரும் செந்தில் பாலாஜி, இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்!
சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் வழிகாட்டலில், கடுமையான நெருக்கடியின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 13ல் கைது செய்தது. அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து அவர் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்த போதும், அவரது ஜாமின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் தள்ளுபடியாயின. இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்ததாகவும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஓர் அமைச்சரை நீக்குவதும் சேர்ப்பதும் நீட்டிக்க வைப்பதும் முதலமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வரும் என்று ஆளும் தரப்பு கூறிவந்தது. இதனால், இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார் செந்தில் பாலாஜி.
ஆனால், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதன் பின்னணியில் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி ஆகிக் கொண்டே வந்தன. இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடித்து வந்த தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவந்த செந்தில் பாலாஜிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றக் காவலை 19வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை செந்தில் பாலாஜி அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.