
பரபரப்பான சூழலில், ஆண்டின் முதல் கூட்டத்தொடர், தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும். சட்டசபை கூடியதும், தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ரவி, தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம், ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையில், அரசின் கொள்கைகள், அரசு செயல்படுத்திய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் முதலியவை இடம் பெறும். ஆளுநர் பேச வேண்டிய உரையை, தமிழக அரசு தயாரித்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அதை, சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிப்பார். அதன் தமிழாக்கத்தை அவைத்தலைவர் வாசித்து முடித்ததுடன் அன்றைய அவை நடவடிக்கைகள் நிறைவு பெறும். மறுநாள் தொடங்கி ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, ஆளுநர் உரைக்கு ஒப்புதல் வழங்கப்படும். இது தான் வழக்கமாக நடைபெற்று வருவது.

ஆனால் திமுக., அரசு அமைந்த பிறகு ஆளுநருடன் மோதல் போக்கையே மேற்கொண்டு வருகிறது. சட்டப்பிரிவு 356ன் மீதான அச்சம் இல்லாததால், கூட்டணி போட்டு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் மாநில அரசு அனைத்து வகையிலும் மத்திய அரசுடன் அரசியலுக்காக மோதல் போக்கையே மேற்கொண்டு வருகிறது. அதன் பலன், மக்கள் நலன் பெரிதும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சி பெரிதும் சரிந்து போயுள்ளது என்பது நிபுணர்களின் பார்வையாக உள்ளது.
திமுக., அரசு அமைந்த தொடக்கத்தில் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட அதிரடி ஆய்வுகளுக்கு முடிவுரை எழுத அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தங்கள் ஊடகங்களின் மூலம் பரப்பி அவதூறு கிளப்பியது திமுக., பின்னர் தற்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்பட்ட பின்னர் வழக்கம் போல் அரசியலை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கே பல விதங்களில் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜன.20 இன்று காலை தமிழக சட்டமன்றத்தின் ஆண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. இதற்காக சட்டமன்ற வளாகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து, அவைத்தலைவர் அப்பாவு வரவேற்றார். ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் காலை 9.30க்கு சட்டமன்றக் கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அவை கூடியதும் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை. இதனால் ஆளுநர் ரவி உரையை படிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த ஆண்டும் இதே போல், உரை நிகழ்த்த சட்டமன்றத்துக்கு ஆளுநர் வந்தார். ஆளுநர் உரை நிகழ்த்தும் முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை மரபாக ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது மரபு என்று அவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார். எனினும், தேசிய கீதம் இசைக்கப்படாததைக் கண்டித்து, அவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். இதன் பின்னர் ஆளுநர் உரையை அவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதே போல் இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது.

முன்னதாக, 2024ல், தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில், ‘சமூக நீதி, சுய மரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, அமைதிப் பூங்கா’ உள்ளிட்ட அலங்கார வார்த்தைகளைத் தனது உரையில் ஆளுநர் தவிர்த்தார். இது அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசு தயாரித்து அளிக்கும் உரையை அப்படியே வாசிப்பதுதான் ஆளுநர் வேலை என்ற விதமாக திமுக.,வினர் கூறினர். எனினும், அரசு தயாரித்து அளித்த உரையே அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தார். இதனால் அவை நிகழ்வு முடியும் முன்பே அவையிலிருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.

அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி ஆளுநரைப் பார்த்து மிக மோசமான உடல் மொழியில் போய்யா என்று சைகை காட்டியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.




