சென்னை: சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் வரும் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் மே 3ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரித்து வருகிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார். சசிகலாவின் உறவினர்கள் விவேக், கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3ஆம் தேதி ஆஜராவார் என கூறப் படுகிறது.
முன்னதாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் முன்னாள் அமைச்சர் ஆனுர் ஜெகதீசன், முன்னாள் தனிச் செயலர் சாந்தா ஷீலா நாயர், கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அண்ணன் தீபக், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு ‘எம்பாமிங்’ செய்த சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறைத் தலைவர் சுதா சேஷய்யன், ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்று அளித்த டாக்டர் பாலாஜி, டாக்டர் சத்யபாமா உள்ளிட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அடங்கிய ‘பென் டிரைவ்’வை டி.டி.வி. தினகரன் தனது வழக்கறிஞர் மூலம் ஆணையத்தில் சமர்பித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி ,டிடிவி தினகரனின் சகலை டாக்டர் சிவக்குமார் ஆகியோரும் ஆஐராகினார். சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். இவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் குறுக்கு விசாரணையும் செய்துள்ளது.