சென்னை: நீட் தேர்வு எழுத திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றிருந்த மாணவர் கஸ்தூரி ராமலிங்கம் என்பவரின் தந்தை கிருஷ்ணசாமி, இன்று காலை அவரை தேர்வு மையத்தில் விட்டு விட்டு வெளியில் வந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்றிருந்த மாணவர் கஸ்தூரி ராமலிங்கம் என்பவரின் தந்தை திருத்துறைப்பூண்டி விளாக்குடியைச் சேர்ந்த திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். சற்றுமுன் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாயாரிடமும் மாணவரின் மாமாவிடமும் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். கிருஷ்ணசாமி அவர்களின் பிரிவைத் தாங்கும் மனவலிமையை இறைவன் வழங்கிட எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன். மாணவர் கஸ்தூரி ராமலிங்கத்தின் மேற்படிப்புக்கு எனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்கிட முடிவு செய்துள்ளேன். – என்று தெரிவித்துள்ளார்.


