சென்னை: உடல் நலக் குறைவால் அபாயக் கட்டத்தில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியில் உடல்நிலை குறித்த அறிவிப்பு இன்று மாலை காவேரி மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில், முன்னேற்பாடாக அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கருணாநிதி குடும்பத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமையை சந்தித்துள்ளனர்.
முதல்வரை நேரில் சந்தித்த போது கருணாநிதி குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையில், 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், இந்தக் கோரிக்கை அதிமுக.,வினரால் நிராகரிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் குடியரசுத் தலைவர் வரை வந்து பார்த்துவிட்டுச் சென்ற நிலையில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு தயாராக இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீரென வாபஸ் பெறப் பட்டுள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை திரும்பப் பெற்றார் மனுதாரர். இதையடுத்து அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திடீரென ஏன் அவர் மனுவை வாபஸ் பெற முடிவெடுத்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதற்கு அவர் தரப்பில் இருந்து இன்னும் பதில் அளிக்கப்பட வில்லை.


