ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு மேற்கொள்ளும் போது, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் படி 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை ஆய்வு மேற்கொள்ள வருகிறது. இந்தக் குழு ஆய்வு மேற்கொண்ட பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.
இது குறித்து விளக்கம் அளிக்க, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் குழு இன்று மாலை தூத்துக்குடி வருகிறது. ஸ்டெர்லைட் காப்பர் கழிவுகளை கொட்டும் இடத்தை வல்லுநர் குழு இன்று மாலை பார்வையிட உள்ளது.
நாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.
இது குறித்து ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப் படும். மேலும் ஸ்டெர்லைட் வழக்குகளில் தொடர்புடையவர்களும், சம்மந்தப்பட்ட தரப்புகளும் பங்கேற்கும் வகையில், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்றார்.
இதனிடையே, தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவைச் சார்ந்த வழக்கறிஞர் விமல் ராஜேஷ், மற்றும் ஸ்டீபன் தாஸ், துரைபாண்டியன் ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னரும் அனல்மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடங்கள் பலவற்றில் காற்றுடன் மாசு புகைமண்டலம் படிந்து துர்நாற்றத்துடன் மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அப்படியென்றால் சுற்றுச்சூழல் மாசடைய இன்னும் பல தொழிற்சாலைகள் காரணமாக உள்ளது என்றே கருத வேண்டியுள்ளது. எனவே, மத்திய ஆய்வுக்குழுவினர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் மாசுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டால்தான் மாசற்ற மற்றும் மக்கள் சுகாதாரமாக வாழக்கூடிய சுற்றுச்சூழல் ஏற்படும்.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, மத்தியக் குழுவினர் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி நாங்கள் மத்திய ஆய்வுக்குழுவிடம் மனு அளிக்கவுள்ளோம் என்று கூறினர்.




