நெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.
வெள்ளக் காலம் என்பதால், தாமிரபரணியில் ஏற்படும் வெள்ளத்தால் அசம்பாவிதம் நேரலாம் என்று கருதுவதால், தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்த நிலையில், அந்த முடிவைபரிசீலனை செய்வதாகக் கூறினார் ஆட்சியர்.
ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்த நிலையில், இந்தத் தடையை நீக்கக் கோரி இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையத் தலைவர் புலவர் மகாதேவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில் காலா காலமாக தாமிரபரணி புஷ்கர விழா புனித நீராடல் எல்லா படித்துறைகளிலும் எவ்வித பிரச்னையுமின்றி சுமுகமாக நடந்துவருகின்றது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அதிக வாகனங்களால் நிறுத்துமிடம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். மாஞ்சோலையில் துப்பாக்கிச் சூடு நடந்த சூழல் போல் பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்றெல்லாம் வீண் காரணங்களைக் கூறி இப்படி தடை செய்வது சரியில்லை. 140 படித்துறைகளில் புனித நீராடல் நடக்கும் என்பதால் இந்த இரு படித்துறைகளில் பக்தர்கள் லட்சக் கணக்கில் குவிவார்கள் என்று கூற முடியாது.
நெல்லையப்பர் காந்திமதியம்மன் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறும் தைப்பூச படித்துறையில் புனித நீராட தடை விதித்திருப்பது மத உரிமைகளுக்கு எதிரானது, சட்ட விரோதமானது என்று கூறி யிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் மகாராஜன், பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழல் நலன் கருதியே தடை விதிக்கப் பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், தடையை நீக்க முடியாது என்று கூறினார்.
இதை அடுத்து இந்த வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
இதனிடையே, இன்று முற்பகல் தைப்பூச மண்டப படித்துறைக்கு வந்து ஆய்வு செய்தார் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி. தொடர்ந்து அங்கிருப்பவர்களிடம் பேசிய அவர், இங்கே ஜபம், பாராயணம் மட்டும் செய்யலாம், கோயிலில் ஹோமம் முதலானவற்றை வைத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு குறைந்த கால அளவில் முடியுமோ அப்படி செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஒரு நாளுக்குப் போதாதா… என்று கூறிவிட்டுச் சென்றார்.




