அண்மைக் காலமாக #MeToo புகார்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சினிமா துறையில் புரையோடிப் போயுள்ள காஸ்டிங்கோச் தொடங்கி, சினிமாத் துறை பிரபல புள்ளிகளின் மீது ஒவ்வொருவராக புகார் தெரிவிக்க… தொடர்ந்து ஊடக வெளிச்சம் பாயும் கர்நாடக இசை துறையில் உள்ளவர்கள் மீதும் இந்தப் புகார்கள் தெரிவிக்கப் பட்டன.
சினிமா துறையில் புகார் கூறப்பட்ட பெரும்புள்ளிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளும் வகையில், குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் மீதே சேற்றை வாரி இறைத்தனர். அவர்களுக்கு பக்க பலமாக சினிமா துறையில் உள்ள புள்ளிகளே குரல் கொடுத்தார்கள். இப்படி குற்றம் சாட்டினால், இந்தத் துறையே குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற வகையில் புகார் கூற வேண்டாம் என்றனர். ஆனால், இதே போல் குற்றம் சுமத்தப் பட்ட கர்நாடக இசைத்துறையிலோ… அவர்களை வரும் மார்கழி சீசனில் கச்சேரிகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என உறுதிபடக் கூறி, மீடூ இயக்கத்துக்கான ஆதரவையும், பெண்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்!!
மீடுவில் பாலியல் புகாருக்கு ஆளான சித்ரவீணா ரவிகிரண், பாடகர் ஓ.எஸ்.தியாகராஜன் உள்ளிட்ட 7 கர்நாடக சங்கீத வித்வான்கள் மார்கழி விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சபாக்காரர்கள் கூறியுள்ளனராம். 71 வயதான ஓ.எஸ்.தியாகராஜன், தன்னிடம் சங்கீதம் கற்றுக்கொள்ள வந்த மாணவியிடம் தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார் எனப் படுகிறது. சித்ரவீணா ரவிகிரன் சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர். மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் வைத்தியநாதன், வயலின் வித்வான்கள் ஆர்.ரமேஷ், நாகை ஸ்ரீராம் ஆகியோரின் நடவடிக்கைகளை தாங்கள் பாலியல் சீண்டலாகக் கருதியதாக பெண்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள இவர்கள் 7 பேரும் வரும் டிசம்பர் சீஸனில் மியூசிக் அகடாமியில் நடக்கும் கச்சேரிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இவர்கள் 7 பேரும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் மியூசிக் அகாடமியில் இருந்தே நீக்கப்படுவார்கள் என்றும் மியூசிக் அகடாமி தலைவர் முரளி கூறியுள்ளார்.
ஆனால், இப்படி எந்த இசையமைப்பாளரும் வைரமுத்து பற்றியோ, இன்னும் மீடு புகாரில் சிக்கியவர்கள் குறித்தோ.. அவர்களுக்கு வாய்ப்புகள் இனி வழங்கப் படாது, அவர்களை எங்கள் திரைப்படங்களில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என கூறியிருக்கிறார்களா என்றால்… இல்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.


