காந்தி தன் உண்ணாவிரதத்தை கைவிட டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் உருவாக்கப்பட்ட ’ ஏழு அம்ச ‘ ஆவணத்தில் ,ஹிந்து மஹா சபாவை சேர்ந்தவர்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்றாலும், அந்த ஆவணம் காந்தியிடம் சேர்ப்பிக்கப்படும் போது அந்த அறையில்,ஹிந்து மஹா சபாவை சேர்ந்தவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.
இது போதும் குழப்பத்தை ஏற்படுத்தவென காங்கிரஸ் கட்சி அதை பயன்படுத்தி கொண்டது. ஹிந்து மஹா சபாவின் தீவிர உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் கொள்கைக்கு மாறாக,சில சம்பவங்கள் நடந்தது பற்றி ( காந்தியின் அறையில் தேவையற்று சில ஹிந்து மஹா சபா உறுப்பினர்கள் இருந்தது பற்றி ) கோபமடைந்தனர்.
அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் செயலாளர் அஸூதோஷ் லஹிரிக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
இதை குறிப்பிடுவதற்கு காரணம், ஹிந்து மஹா சபாவின் மொத்த சிந்தனையுமே காந்திக்கு எதிராக இருந்தது என்பதை ‘ காந்தி கொலை ’வழக்கின் போது காவல்துறை சந்தேகிக்க ஒரு காரணமாயிற்று.
உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு காந்தி செல்லும் இடமெல்லாம் ஹிந்துக்கள்,முஸ்லீம்கள்,சீக்கியர்கள் ஒன்றாக பழங்கள்,இனிப்புகள் ஆகியவை பரஸ்பரம் கொடுத்துக் கொள்ளும் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.
காங்கிரஸ், தங்களை மக்கள் முன் முட்டாள்களாக காட்சியளிக்க வைத்து விட்டது எனும் கோபம் ஹிந்து மஹா சபாவினருக்கு இருந்தது.
இதற்கிடையே, தங்கள் தொண்டர்களை மீண்டும் போராட்டத்திற்கு ஹிந்து மற்றும் சீக்கிய தலைவர்கள் தூண்டி விடாமல் இருக்க, அனைத்து மத ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்தது.
ஹிந்து மஹா சபாவின் செயலாளர் லஹிரி ,ஒரு அறிக்கையை வெளியிடுவதை தவிர, வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
ஹிந்து மஹா சபா எந்த உறுதிமொழியிலும் கையெழுத்திட வில்லை என்பதை மீண்டும் உறுதி செய்த லஹிரி, அந்த உறுதிமொழியை செயல்படுத்த தனது கட்சி ஒரு போதும் சம்மதிக்காது என்று கூறினார்.
‘காந்தியின் உண்ணாவிரதத்தின் காரணமாக ஹிந்துக்களின் நிலை, இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானிலும் பலவீனப்படுத்தப்பட்டு விட்டதாக அவர் தன் அறிக்கையில் குற்றஞ்சாட்டினார் ‘.
‘ஏழு அம்ச கொள்கையை ஒரு தற்கொலை கொள்கை என வருணித்த அவர் அதிலிருந்து ஹிந்து மஹா சபா முற்றிலும் விலகி நிற்பதாகக் கூறினார் ‘. இந்த அறிக்கையானது 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ந் தேதி வெளியிடப்பட்டது.
அதன் நகல்களை படித்த நாதுராமும், ஆப்தேயும் திருப்தி யடைந்தனர். தங்கள் கட்சி, கொள்கைகளை விட்டு கொடுக்காது, காந்தியின் உயிரைக் காக்க, ஹிந்துக்களின் நலன்களை ,தேசத்தின் நலன்களை புறக்கணிக்கும் காரியங்களில் ஈடுபடவில்லை என்று சந்தோஷமடைந்தனர்.
தாங்கள் நிறைவேற்ற எண்ணியிருந்த காரியத்திற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில்,ஹிந்து மஹா சபாவின் நிலைப்பாடு தெளிவானது அவர்களுக்கு உத்வேகம் அளித்தது.
அன்றைய மாலை பத்திரிகைகளில் வந்த ஒரு செய்தி அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்தது. காந்தியின் உண்ணாவிரதத்தின் கடைசி இரண்டு நாட்களில் ,கவலை அளித்த அவரது உடல்நிலை, தேறி வருவதாகவும், அடுத்த நாள் ( அதாவது ஜனவரி 20ந் தேதி ) அவர் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வெளியே வந்து கூட்டத்தினரிடையே சில வார்த்தைகள் பேசக்கூடும் என்றும் அந்த செய்தி தெரிவித்தது.
இப்போது ஒரு நடைமுறை பிரச்சனை ஒன்று தீர்ந்தது. அவர்கள் காந்தியை கொல்ல வந்திருந்தார்கள்.
அவர் படுக்கையிலிருக்கும் வரை,அறையை விட்டு வெளியே வராத வரையில் ,அவர்களது திட்டத்தை செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அவரைச் சுற்றி அவரது விச்வாசிகளும்,அவரை பார்க்க வருபவர்களும் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.
அவர் வெளியே வருவது நாதுராம்,ஆப்தே,மற்றும் அவரின் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது. ஏனென்றால் அவரை வெளியே வைத்துக் கொல்வது எளிது என்று அவர்கள் எண்ணினார்கள்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்