சென்னை:
கள்ளக்குறிச்சி அருகே மருத்துவ மாணவிகள் மூன்று பேர் மர்ம மரணம் தொடர்பில், மத்திய – மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மாணவிகள் மரணத்திற்கு காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
எஸ்.வி.எஸ் என்ற அந்த தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்பு சார்ந்த மருத்துவக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.இதனால் அக்கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மிகப் பெரிய அளவிற்கு கட்டணக் கொள்ளையும் நடைபெற்று வந்துள்ளது.இதை எதிர்த்து பல் வேறு போராடங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்பட வில்லை. மத்திய – மாநில அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்நிலையில் , அக்கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் ரத்தாகியுள்ளது.இதனால் மாணவ – மாணவியர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அக்கல்லூரியில் படித்துவந்த 3 மருத்துவ மாணவிவகள் மர்மமான முறையில் கிணற்றில் மூழ்கி இறந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு கடைபிடித்துவரும் தவறான மருத்துவக் கல்விக் கொள்கையும், மருத்துவக் கல்வி தனியார் மயமானதும் தான் இத்தகைய இறப்புகளுக்கு அடிப்படைக் காரணம்.
அடிப்படை வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, பிறகு திடீரென அனுமதியை ரத்து செய்வது போன்றவை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இது போன்று பாதிக்கப்பட்டு ,பணத்தையும் இழந்து படிப்பையும் தொட முடியாமல் உள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் கொள்கையில் உள்ள குறைபாடே இத்தகையை அவல நிலைகுக் காரணம்.
மருத்துவக் கல்வியும், உயர் கல்வியும் தனியார் மயமானதும், வியாபாரமயமானதும் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிலை குலைந்து உள்ளனர்.
மாநில அரசும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தடையில்லா சான்றிதழ் வழங்கும் பொழுது , அக்கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செயல்படுகிறது.இதில் ஊழல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டால் அதற்கு மாநில அரசுகள் இழைக்கும் தவறுகளும் தான் காரணமாகின்றன.
எனவே, இந்த மாணவிகளின் மரணத்திற்கு மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கைகளும், ஊழல் முறைகேடுகளுமே அடிப்படைக் காரணம்.அம்மாணவிகளின் மரணத்திற்கு மத்திய – மாநில அரசுகள் பொறுப் பேற்க வேண்டும்.
மாணவிகளின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.மரணம் அடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த உரிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் உள்ள விதிமுறைகளில் உரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். முறையாக செயல்படாத மருத்துவக் கல்லூரிகளை மத்திய – மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


