அதிகமான குடிகார அடிமைகளைக் கொண்ட மாநிலம் எனும் அவப்பெயரை எடுத்து தமிழகம் முதலிடத்தில் திகழ்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
2015–16 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின் முதற் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.அதில் தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கையும், அருந்தப்படும் மதுவின் அளவும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள உண்மை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தேசிய குடும்பநல கணக்கெடுப்பு முடிவுகளின்படி தமிழகத்தில் 1549 வயது ஆண்களில் 46.70 விழுக்காட்டினர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
2005–06 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது 41.50 விழுக்காடாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5.20 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இதே வயதுடைய பெண்களிடையேயும் மதுப்பழக்கம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. 2005–06 ஆம் ஆண்டில் 0.10 விழுக்காடு பெண்கள் மட்டுமே மதுவுக்கு அடிமையாகியிருந்தனர். ஆனால், இப்போது இது 0.40 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது.
மதுவுக்கு பெண்கள் அடிமையாவது இதே வேகத்தில் நீடித்தால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது அருந்துவதை யாராலும் தடுக்க முடியாது.
இதே காலத்தில் தமிழகத்தின் பீர் மற்றும் மது விற்பனை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2005–06 காலத்தில் மாதம் தோறும் 19.07 லட்சம் பெட்டிகள் மது விற்பனையானது. இப்போது அது இரண்டரை மடங்கு அதிகரித்து 46.16 லட்சம் பெட்டிகளாக உள்ளது. அதே போல் பீர் விற்பனை 10.90 லட்சம் பெட்டிகளில் இருந்து 20.13 லட்சம் பெட்டிகளாக அதிகரித்திருக்கிறது.
10 ஆண்டுகளில் மது விற்பனை இரு மடங்காக அதிகரிப்பது என்பது மிகவும் ஆபத்தான போக்கு ஆகும். 2002–03 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் மது விற்பனை அதிகரிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த பத்தாண்டில் அனைத்து ஆண்களும் மொடாக் குடியர்களாக மாறும் ஆபத்துள்ளது.
குடும்பநலக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 14 மாவட்டங்களில் சதவிகித அடிப்படையில் குடிகாரர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 4–ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள திரிபுரா, அந்தமான், சிக்கிம் ஆகியவை சிறிய மாநிலங்கள் என்பதால், அதிக குடி அடிமைகளைக் கொண்ட பெரிய மாநிலம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலும் தமிழகம் தான் (1.10 கோடி பேர்) முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாடு இத்தகைய குடிகார மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் டாஸ்மாக் மதுக்கடைகள் தான். 2002–03 ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமை ஆக்கப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் மது விற்பனையும், குடிக்கு அடிமையானோர் எண்ணிக்கையும் கட்டுக்குள் தான் இருந்தது. தமிழக அரசே மதுக்கடைகளை நடத்தத் தொடங்கிய பிறகு தான் இவை ராக்கெட் வேகத்தில் அதிகரித்தன.
இவ்வாறாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றிய பெருமை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளையே சாரும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


