சென்னை:
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கோவை பொதுக்கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் கோவை சூலூரில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்காக, பிரதமர் மோடி பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவை நிறுவனத் தலைமையகத்துக்கு போன் செய்த மர்ம நபர், பிரதமர் மோடியின் கோவை பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அடுத்தடுத்து 10 முறைக்கு மேல் இதுபோன்ற அழைப்புகள் வந்ததால் ஆம்புலன்ஸ் சேவை நிறுவன ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரித்துவருகின்றனர்.


