காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும், பாராளுமன்ற மக்களவை முன்னாள் சபாநாயகருமான பல்ராம் ஜாக்கர், தனது 93-ம் வயதில் புதுடெல்லியில் இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த பல்ராம் ஜாக்கரின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சட்டசபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும், மாநில கவர்னராகவும் அவர் பதவிவகித்த காலத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து பொதுவாழ்வில் பணியாற்றிய பல்ராம் ஜாக்கரின் அர்ப்பணிப்பை இந்த நாடும், நாட்டு மக்களும் என்றென்றும் மறக்க முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பல்ராம் ஜாக்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் பாராளுமன்ற செயலகத்தை நவீனப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார்’ என தெரிவித்துள்ளார்.


