கட் அவுட்டில் பாலாபிஷேகம் செய்வது பற்றி தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனக் கூறினார் நடிகர் சிம்பு.
என் படம் வெளியாகும் போது பிளக்ஸ் வைப்பது, கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம். அந்த பணத்தில் அப்பா, அம்மாவுக்கு உடை எடுத்துக்கொடுங்கள் என ‘எழுமின்’ பட விழாவில் ரசிகர்களுக்கு சிம்பு கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ, சிம்புவைப் பாராட்டி வைரலானது.
திடீரெனெ வேறு ஒரு வீடியோ வெளியிட்ட சிம்பு “எனது படம் வெளியாகும் போது பெரிதாக பேனர் வையுங்கள். கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள். பால் பாக்கெட்டில் அல்ல.. அண்டாவில் பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள்” என பேசினார். சிம்புவின் கருத்துகளுக்கு தமிழ்நாடு பால் முகவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு “ நான் நல்லதாக ஒரு விஷயம் பேசினால் அது மக்களை சென்றடைவதில்லை. நெகட்டிவாக பேசினால் உடனே அதை ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. சிலர் அதை சர்ச்சையாக மாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த வருடம் என் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த எனது ரசிகன் இறந்துவிட்டான். எனவே, என் ரசிகர்கள் இனிமேல் அப்படி செய்யக் கூடாது என்பதற்காகவே அந்த வீடியோவை வெளியிட்டேன். ஆனால், அது மக்களை சென்று சேரவில்லை. எனவேதான், நெகட்டிவாக பேசினேன்.
நான் பாலை எனது கட் அவுக்கு ஊற்றச் சொல்லவில்லை. பசியால் வடும் மக்களுக்கே ஊற்றச் சொன்னேன். நான் மாற்றி மாற்றி பேசவில்லை. மாற்றம் வேண்டும் என்றுதான் பேசினேன். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய விதத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என சிம்பு தெரிவித்தார்.
இதை அடுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் சிம்புவிற்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி என்று பால் முகவர் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், “கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம்” செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த 22ம் தேதி தான் வெளியிட்ட காணொளி காட்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும், அதற்காக தான் வருந்துவதாகவும் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் ஊடகங்கள் முன் நடிகர் சிம்பு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அவரது செயலை தவறென்று எடுத்துச் சொல்லி புரிய வைத்த பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் சமூக வலைதள ஊடகங்களுக்கும், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு தனது “ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம்” என்பதை ஊடகங்கள் வாயிலாக ஆணித்தரமாக எடுத்துரைத்த நடிகர் சிம்புவுக்கும்எங்கள் நன்றியும் பாராட்டும் என்று கூறியிருந்தார்.