மழை வெள்ளத்தின்போது தமிழக அரசு மெதுவாக செயல்பட்டதாக மத்திய குழு அறிக்கை அளிக்கவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கு. ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2-ம் தேதி ‘எக்கனாமிக் டைம்ஸ்‘ நாளேட்டில், ‘‘வெள்ள நிவாரணப் பணியில் தமிழ்நாடு மெதுவாக செயல்பட்டது – மத்திய அறிக்கை கூறுகிறது’’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த தகவலின் உண்மைத்தன்மையை சோதித்து அறியாமல், அந்த செய்தியை பிற மீடியாக்களும் வெளியிட்டுள்ளன.
எக்கனாமிக் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான இந்த கட்டுரை அடிப்படை ஆதாரமற்றது; தவறானது.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் தமிழக அரசு விளக்கம் கேட்டது. அதற்கு பதில் அளித்து அந்த அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்துள்ளது.
அதில், அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதுபோல், “மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திடம் எந்த அறிக்கையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் வந்த தகவல் எதையும் அமைச்சகம் தங்கள் கருத்தாக ஏற்கவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


