தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள தாய்மடி அறக்கட்டளை, ஆதரவற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி வருபவர் திருநங்கை ஸ்ரீதேவி.
சேலம் மாவட்டம், காளிக்கவுண்டம்பட்டியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை சிறுவயதிலேயே உயரிழந்தார். உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில், தந்தை வாங்கிய கடன் கூடுதல் சுமையாக்கியுள்ளது. இந்த சூழலில் 12-ம் வகுப்பு படிக்கும் நேரத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஸ்ரீதேவி.
இந்த செயல் அப்போது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், தற்போது அனைத்துக் கடனையும் அடைத்து, மற்றவர்களுக்கு சேவை செய்து வருவது தனக்கு பெருமையாக உள்ளதாக அவரது தாய் முத்தம்மாள் தெரிவிக்கிறார் .
தமிழ் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, நாம் தமிழர் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அந்த கட்சியின் சென்னை ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தான் போட்டியிட இருப்பது திருநங்கைகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்கான முதற்படி என்று ஸ்ரீதேவி கூறுகிறார் .
மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்கினால் மக்களுக்காவும், திருநங்கைகளுக்காகவும் பாடுபடுவேன் என்றும் தன்னுடைய வெற்றி, திருநங்கை சமூகத்தின் வெற்றியாகவே கருதப்படும் என்றும் ஸ்ரீதேவி தெரிவிக்கிறார்.


