புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருப்பவர் மாரிமுத்து. இவர் கடந்த 5 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போனார். அவர் குறித்து வேறு தகவல் எதுவும் தெரியாத நிலையில், அவர் நகைகளுடன் மாயமானதாக தகவல் பரவியது.
இதை அடுத்து, வங்கியில் நகைகள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இரண்டாவது நாளாக நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், வங்கியில் தாங்கள் அடகு வைத்த நகைகள் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, மாரிமுத்துவை காணவில்லை என்று அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மாரிமுத்துவின் கார் புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதையும் போலீஸார் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.