ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு அருகே மந்தைவெளி தெருவை சேர்ந்த தீபிகா என்பவர் தனது கணவரையும் ஒரு வயது மதிக்கத் தக்க குழந்தையும் கொலை செய்து அருகே உள்ள ஏரிக்கரையில் புதைத்துள்ளார்!
மனைவியே கணவனையும் குழந்தையையும் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமிரி அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25 வயது) இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த தீபிகா (20 வயது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு பிரவீன் என்ற ஆண்குழந்தை பிறந்தது. பிரவீணுக்கு இப்போது ஒரு வயது ஆகிறது.
திருமணத்துக்கு பின்னர் ராஜா மற்றும் தீபிகா இருவரும் தாஜ் புரா கூட்ரோடு மந்தைவெளி பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மே 13ஆம் தேதி முதல் தனது கணவர் ராஜா மற்றும் தனது குழந்தை பிரவீண் ஆகிய இருவரும் காணவில்லை என மே 16 ஆம் தேதி தீபிகா ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்
தீபிகா அளித்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், தீபிகா அளித்த புகாரில் காவல் துறையினர் சந்தேகம் அடைந்ததால் அவரிடமே தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தீபிகா, ராஜா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிந்தது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்த போது, கடந்த 13ஆம் தேதி ராஜாவுக்கும் தனக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதற்குப் பின்னர் ராஜா தனது குழந்தை பிரவீணை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டதாகவும் தீபிகா காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தீபிகா அளித்த முன்னுக்குப் பின்னான தகவல்களில் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீபிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக காவல் துறையினரிடம் தனது கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரவீன் ஆகிய இருவரையும் கொலை செய்து அவரது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் புதைத்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து ஆற்காடு கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தீபிகாவை அழைத்துச் சென்று இருவரது உடல்களும் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுமாறு கூற, அதே போல் அவரும் அடையாளம் காட்டியுள்ளார்.
தொடர்ந்து, ஆற்காடு வட்டாட்சியர் மற்றும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆகியோரின் முன்னிலையில் ராஜா மற்றும் அவரது குழந்தை பிரவீன் ஆகிய இருவரின் உடல்களும் ஏரிக் கரையில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தீபிகாவுடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து தீபிகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!
மனைவியே கணவன் குழந்தையைக் கொலை செய்து புதைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.