காதல் அது எப்பொழுது எப்படி வரும்,யார் மீது வரும் என்றெல்லாம் தெரியாது.காதலுக்கு கண் இல்லை.மதம்,ஜாதி , ஏழை,பணக்காரன், படிப்பு,வேலை என எதுவும் பார்ப்பதில்லை காதல்.சினிமா,டி.வி களில் காதலை ரசித்து காதலர்கள் இணைய வேண்டும் என எதிர்பார்க்கும் பெற்றோர்கள், தங்கள் குடும்பத்தில் அதனை ஏற்பதில்லை.காதலையையும்,காதலர்களையும் பிரிக்க முயலுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பணங்காமட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான விஜய். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஹர்ஷியா பானு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக இவர்கள் காதல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்ந்திருக்கிறது.
இவர்களது மதம் மாறிய காதல் வீட்டினர்க்கு தெரியவர, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வீட்டாரின் சம்மதத்துடன் வாழ்வில் ஒன்றுசேர முடியாது என முடிவெடுத்த காதல் ஜோடி குன்னத்தூரில் இந்து முறைப்படி பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து மணமகள் குடும்பத்தினர் கடுமையான கோபம் அடைந்தனர்.
மணமக்களை தேடிக் கண்டுபிடிக்கவும், ஹர்ஷியா பானுவை பிரித்துச் செல்லவும், ஹர்ஷியாவின் பெற்றோரும் உறவினர்களும் தீவிரமாக முயற்சிப்பதைக் கண்டு பயந்துபோன மணமக்கள் இருவரும் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.காவல் துறை அலுவலகத்தில், ‘நான் என்னுடைய முழு விருப்பத்தின் பேரில் விஜயை காதலித்து திருமணம் செய்திருக்கிறேன், என் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்’ என்று மனு கொடுத்திருக்கிறார் ஹர்ஷியா பானு.
பெற்றோரை அழைத்து எச்சரிப்பதுடன் நின்றுவிடாமல், அசம்பாவிதம் எதுவும் நிகழாவண்ணம் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.