காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க, விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்துள்ளனர். இதனால் காஞ்சி நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயிலிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
அத்திவரதர் இன்று இளம் நீலநிறப் பட்டாடையில் தரிசனம் தருகிறார். விடுமுறை நாளான ஞாயிறு மற்றும் ஏகாதசி தினம் என்பதால், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலில் பெரும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
கடந்த 27 நாட்களில் சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு தினங்களில் சராசரியாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனத்துக்காகக் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதலே சுமார் 3 கிமீ., தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசைஇல் 4 மணி நேரமாக காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, ”2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இன்று குவிந்துள்ளதால் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க வேண்டும். மாவட்ட எல்லையிலும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று கோரினார்.
இந்நிலையில், இன்று காலை கூட்ட நெரிசலில் சிக்கி, பக்தர்கள் 15 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டனர்.