உந்தன் வடிவாய் வாழ நாங்கள் ஆசி வேண்டுகிறோம்!
எங்கள் குடும்பத்தின் முதல் ஸ்வயம் சேவக். 1948 ஆம் ஆண்டு எங்கள் வீட்டில் பரம பூஜனிய ஸ்ரீ குருஜி பாதம் பட்டது இவரால்! நாகர்கோவிலில் ஸ்ரீ கு.இ.இராமசாமி ஜியால் சங்க அறிமுகம்!
திருவனந்தபுரத்தில் பொறியியல் பட்டப்படிப்பின் போது ஸ்ரீ பரமேஸ்வரன் ஜியின் புளிமூடு ஷாகா ஸ்வயம் சேவக்… இவருடன் சக ஸ்வயம் சேவகராக இருந்தவர் பத்தமடை சுந்தரம்ஜி ..
பெங்களூரு இந்தியன் டெலிபோன் இண்டஸ்டிரியில் வேலைக்குச் சேர்ந்தர் ! பின்னர் பொதுப்பணித் துறையில் சில காலம் ! அப்போது சீன யுத்தம் வந்தது , இந்தியா பின்னடைவை சந்தித்தது ! இராணுவத் தளவாட உற்பத்தியில் பாரதம் இறங்க வேண்டும் என்ற ஞானம் பிறந்தது அரசுக்கு !
வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தவர், பொதுப்பணித்துறை வேலையை இராஜினாமா செய்து விட்டு, ஆவடியில் விஜயந்தா பீரங்கியை வடிவமைக்கும் பணியில் சேர்ந்தார் !
சென்னையிலும் தன்னை சங்கப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார் ! ஸ்ரீ சுப்பாராவ் ஜியுடன் நெருங்கிய தொடர்பு !
பாரதம் உலகை ஆள வேண்டும் என்ற துடிப்பு ! இரவு பகல் பார்க்காமல் பீரங்கி வடிவமைப்பில் ஆழ்ந்த சிந்தனை ! மனதின் வேகத்தைத் தாங்க முடியாத உடல், பக்கவாதத்தால் இவரைத் தள்ளியது !
அப்போது அவர் மனைவி கர்பவதி ! மன உறுதியுடன் மீண்டெழுந்தார் ! ஐ.சி.எப்பில் வேலைக்குச் சேர்ந்தார் ! அவர் விரும்பிய வாய்ப்பு வந்தது ! இராணுவத் தளவாட உற்பத்தி அமைப்பான ஆர்டினன்ஸ் பேக்டரியில் வேலைக்குச் சேர்ந்தார் !
ஆர்டினன்ஸ் காலேஜ் முதல்வர் , டெபுடி டைரக்டர் ஜெனரல், ஆர்டினன்ஸ் போர்ட் மெம்பர் போன்ற உயர் பதவிகளை வகுத்து பணிமூப்புப் பெற்று நாகர்கோவிலில் , எங்கள் குடும்ப வீட்டில் செட்டிலானார் !
அவர் மனைவியின் ஊர் செங்கோட்டை, ஆகவே அதன் அருகில் மேலகரத்தில் சில காலம் ! மனைவி இறந்த பின் மகனுடன் சென்னைக்கு வந்தார்!
நேற்று சென்னையில் (மே 6 , 2021) தன் பூத உடலை விட்டு விட்டு இறை நிலை அடைந்தார் அகவை 87 கண்ட ஈ.பெ என்ற ஈஸ்வரப் பெரியப்பா! தன் இறுதி மூச்சு வரை தேசத்தைப் பற்றிய சிந்தனை! 2020 ஆகஸ்ட் மாதம் கீழே விழுந்தவரை அறுவை சிகிச்சைக்காக சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தோம். அறுவை சிகிச்சைக்கு முந்தைய தினம் அவர் நினைவு தப்பியது. மூளையில் இரத்தக் கசிவு என்று சொல்லி, மூளை அறுவை சிகிச்சை செய்து வீட்டிற்கு அனுப்பினர்!
சில நாட்களில் நினைவு திரும்பியது. அப்போது லடாக் பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தது. கோவிட் காரணத்தால் நான் பெரியப்பா வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து வந்தேன் . பல நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற போது, சீனாவை இந்தியா வெல்லும், லடாக்கில் நாம் வெற்றி பெரும் போது திபெத் தனி நாடாகும், நம் விமானப் படையின் செயல்பாடு, கப்பற்படையின் செயல்பாடு , பீரங்கிகள் மற்றும் படைகளின் வியூகம் எப்படி அமையும் என்று உற்சாகத்துடன் சொன்னார்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பழையபடி ஒழுக்கம், கட்டுப்பாடு, திறன் உள்ளதாக மாறும் என்று உற்சாகமாகப் பேசினார் ! அதுவே அவருடனான என் கடைசி உரையாடல் ! இந்த உரையாடல் நடந்த காலத்தில் அவரால் நெருங்கிய சொந்தக்காரர்களின் பெயரைக் கூட நினைவுபடுத்த முடியவில்லை ஆனால் எல்லைப் படை வியூகம், வருங்கால பாரதம், பழுதில்லாத ஆர்.எஸ்.எஸ் இவைகள் மட்டும் சிந்தையில் தடையறத் தவழ்ந்தது .
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவர் ஆர்.எஸ். எஸ் அமைப்பிற்கு கங்காஞ்சலி கொடுக்கத் தவறியதில்லை ! பல சங்க அமைப்புக்களுக்கு உதவி செய்து வந்தார்! ஒரு ஸ்வயம் சேவகர் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை அவரிடமிருந்து படிக்க வேண்டும்!
உடல் ஊனமுற்ற காரணத்தினால் அவருக்கு இரயில் பயண டிக்கெட் சலுகை உண்டு. அவர் ஓய்வு பெரும் வரை அதைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக இருந்தார்! நான் சம்பாதிக்கிறேன் … அந்த சலுகை ஏழைகளுக்கு … அரசு பணம் எனக்கு வேண்டாம் என்று சொல்வார்! வரிச் சலுகைகளைக் கூட பயன்படுத்தாமல், வரி கட்டுவதை தேசிய சேவை என்று கருதியவர் ஈஸ்வரப் பெரியப்பா!
1991ல் அவர் பணி மூப்புப் பெரும் முன் கொல்கொத்தாவில் அவர் வீட்டிற்குச் சென்றேன்! அலுவலகத்திற்குச் செல்ல தன் அலுவலக வாகனத்தை பயன்படுத்தாமல் தன் நண்பருடன் செல்வார்! அரசுப் பணத்தை வீணடிப்பது தவறு! ஏன் பெட்ரோலை செலவு செய்து நாட்டிற்கு நஷ்டம் ஏற்படுத்த வேண்டும்? என்று சொல்வார்!
ஈஸ்வர பெரியப்பா ஒரு ஐயப்ப பக்தர். “சபரிமலைக்குப் போவோம்… டோலி ஏற்பாடு செய்கிறேன் என்றேன்” சட்டென்று வந்த பதில்” இன்னொரு மநிதன் என்னைத் தூக்குவதா? இது ஈஸ்வர பெரியப்பாவின் மநித நேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. எப்படி வேண்டுமென்றாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வார் அவர் ஆனால் சில அடிப்படைக் கொள்கைகளைகளில் நோ காம்பிரமைஸ்
எங்கு வேலைக்குச் சென்றாலும், அவர் அறையில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கும்! வள்ளுவத்தை வார்த்தையிலில்லாமல் வாழ்க்கையாக வாழ்ந்தவர் ஈஸ்வர பெரியப்பா.
பரம பூஜனீய ஸ்ரீ குருஜி என்று தான் குருஜியை எப்போதும் குறிப்பிடுவார்! குருஜியின் சொற்பொழிவுகளிலிருந்தும், வாழ்க்கை சம்பவங்களிலிருந்தும் பல மேற்கோள் காட்டுவார்! அதன் படி வாழ முயற்சிப்பதாகக் கூறுவார்! என்னால் ஷாகா போக முடியாது ஆனால் ஸ்வயம் சேவகனாக வாழ முயற்சிக்கிறேன் என்பார் !
ஈ.பெ பணிமூப்புப் பெற்றபின், வீரத்துறவி ஸ்ரீகோபால் ஜி அவர்கள் சொன்னதற்கிணங்க நாளொன்றுக்கு ஆயிரம் காயத்ரி ஜெபித்து வந்தார்! வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் நடத்தும் பொது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஈ. பெ தவறாமல் வருவார் ! இந்த மாமநிதரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது …. காரணம் அவர் ஆர்.எஸ்.எஸ்காரராம்!
2020 ஆகஸ்ட் மாதம் ஆஸ்பத்திரியில் அவர் நினைவு தப்புவதற்கு முன் அவர் இளைய மகன் ஸ்ரீராமிடம் “கெளதம் பல நல்ல விஷயங்கள் செய்கிறான், அவனுக்கு நம் குடும்பம் பக்கபலமாக உதவ வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்!
ஹிந்து சமுதாயப் பணியில் நான் எவ்வளவோ இன்னல்களை சந்தித்திருக்கிறேன், பல வழக்குகள், காவல்துறை அடக்குமுறை, துரோகம் …. அப்போதெல்லாம் தொடர்ந்து வேலை செய்ய எனக்கு ஆதாரமாக இருந்து, ஊக்கமளிப்பது எங்கள் குடும்பம்! எங்கள் குடும்பத்தின் ஆதாரம் எங்கள் ஈஸ்வரப் பெரியப்பா!
எனது இன்னொரு பெரியப்பாவான சந்துரு என்ற ஸ்ரீசங்கர நாராயணனை எம்.ஐ.டியில் படிக்க உதவினார். அவர் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானியானார்| என் தந்தையை சென்னைச் சட்டக் கல்லூரியில் படிக்க வைத்து வழக்குரைஞர் ஆக்கினார்! என் சித்தப்பாவை எம்.ஐ.டி யில் பொறியியல் படிப்பு படிக்க வைத்ததால் அவர் பிலாய் ஸ்டீல் பிளான்டில் உயர் பதவி பெற்றார்!
ஆண்டு தவறாமல் சிருங்கேரி சாரதா பீடம் செல்வார் … குருவின் மீது அவர் கொண்ட நம்பிக்கை அபாரம்! பல வேத பாடசாலைகளுக்கு உதவி, பலருக்கு கல்வி உதவி என்று சைலண்டாக செய்த சமூக பணிகள் ஏராளம்! பல பெரிய பதவிகளை வகித்தாலும், பல சாதனைகளைப் புரிந்தாலும், பல உதவிகளைச் செய்தாலும், அதன் சொந்தக்காரன் நான் என்ற அகந்தை சிறிதும் இல்லாமல் வாழ்ந்த கர்மயோகி ஈஸ்வரப் பெரியப்பா!
ஈஸ்வரப் பெரியப்பா கோபப்பட்டு யாரும் பார்த்திருக்க முடியாது! அதிர்ந்து கூடப் பேச மாட்டார்! தன் உடல் கஷ்டத்தைக் கூட சொல்ல மாட்டார்! எந்த சூழலிலும், யாருடனும் இசைந்து போவார்! கலகலப்பாகப் பழகுவார்! எல்லாக் குடும்ப நிகழ்வுகளுக்கும் போவார்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த எங்கள் பெரிப்பாவின் குடும்பத்தில் பிறந்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன் !
நேர்மை, ஒழுக்கம், விடாமுயற்சி, தேச பக்தி, பாசம், ஈகை, தெய்வ பக்தி, அறிவு என்று அனைத்திற்கும் இலக்கணமான ஈஸ்வரப் பெரியப்பாவின் கனவை நனவாக்க நம் வாழ்க்கை அமைய ஈஸ்வரப் பெரிப்பாவையே வேண்டுகிறேன்!
ஓம் ஷாந்தி!
- பால.கௌதமன்
(நிறுவுனர், வேத விஞ்ஞான ஆராய்சி மையம் & ஸ்ரீடிவி)