திருப்புகழ் கதைகள்: சைவசித்தாந்தம்!

Published:

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 187
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

கலைகொடு பவுத்தர் – பழநி 4
சைவசித்தாந்தம்

அடுத்து அருணகிரியார் கலகமிடு தர்க்கர் என்று குறிப்பிடுகிறார். தருக்க நூலைச் செய்தவர் கௌதமர். நியாய சூத்திரங்களும் தருக்கமேயாம். இத் தார்க்கீகர்கள் ஐம்பூதங்கள், காலம், திசை, மனம், உயிர், கடவுள் என்பனவற்றை ஒப்புக் கொள்வர். கடவுள் எல்லாஞ் செய்ய வல்லவன். அவன் திருவுள்ளப்படி உலகந் தோன்றி நின்று ஒடுங்கும். இறைவன் வாக்கு வேதம், உயிர்கள் வினைக்கீடாகப் பிறப்புடையன. மனம் அணுவளவினதாய், உயிர் தோறும் வெவ்வேறாய் நிற்கும். மனத்தோடு கூடாமற் போனால் உயிர்க்கு அறிவில்லை, மனமற்றவிடத்தே உயிர் கல்போல் கிடக்கும். அதுவே முத்தியாகும்.

இதற்கு அடுத்து குறிப்பிடப்படும் வாம என்பது வாம மதம். இது சக்தியை மட்டும் வழி படும் மதமாகும். அதாவது சாக்தம். இம்மாதம் வாமம் என்ற ஆகமத்தைத் தழுவியது. இதன் பின்னர் குறிப்பிடப்படும் பயிரவர் என்பது பயிரவ வாதம் எனப்படும். இம்மத்தத்தைச் சார்ந்தவர்கள் வைரவரை வழிபடுகின்றவர்கள். வாம மதத்தினரும், பைரவ மதத்தினரும் முப்பத்தாறு தத்துவங்களையும் ஒப்புக்கொண்டவர்கள். எனினும் கடவுளுக்குப் பரிணாமம் கூறுகின்றமையாலும் கடவுள் உருவில் ஒடுங்குதலே முத்தி என்பதனாலும் இவையும் சித்தாந்த சைவத்தினின்றும் வேறுபடுகின்றன.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இந்த மதத்தவர்கள் தத்தம் கொள்கைக்கு மாறுபடுகின்றவர்களை எதிர்த்து, தத்தம் சமய நூல்களை எடுத்துக் காட்டி வாதிட்டு நிற்பர். மேற்கூறிய சமயவாதிகள் அனைவர்க்கும் தெரிவதற்கு இயலாத சித்தாந்த சைவமான உண்மையை அடியேனுக்கு உபதேசிக்கவேண்டும் என்று முருகனிடம் அருணகிரிநாதர் வேண்டுகின்றார். சித்தாந்த சைவம் என்பது முடிந்த முடிவான சமயமாக உள்ளது. எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டது. எச்சமயத்தாரையும் இகழாதது.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

நால்வர், திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர், மெய்கண்டார், முதலிய சந்தான குரவர்கள், தாயுமானார், பாம்பனடிகள் முதலிய ஆன்றோர்கள் அநுபவத்தில் கண்டது. வேதத்தின் தெளிவாகவும், சிவாகமங்களின் உட்பொருளாகவும் விளங்குவது. இத்தகைய சைவ சித்தாந்தத்தின் அநுபவ ஞானமாகிய சிவஞான போதத்தை நல்கி, முருகா, உன் திருவடியை அடியேனுக்குத் தந்தருளும் நாள் ஒன்று எனக்கு உண்டாகுமோ?” என்று அருணகிரிநாதர் முருகனிடம் வேண்டுகின்றார்.

இதன் பின்னர் அருணகிரியார் படைபொருது மிக்கயூக மழைமுகிலை ஒட்டியேறு பழநி என்ற சொற்களின் மூலம் பழநிமலையில் உள்ள குரங்குகள், மழை பொழியும் முகிலைக் கண்டு, நாம் நனைந்து துன்புறுவோமே என்று எண்ணி அஞ்சி, வருமுன் காக்கவேண்டும் என்று, மலை மீது ஏறி மழைக்குத் தற்காப்பான இடங்களில் பதுங்கிக் கொள்கின்றன. இது என்ன கருத்தைக் குறிக்கின்றது, புரிகிறதா? கருமுகில் போன்ற கூற்றுவன் வருவான். அவன் கோபாக்கினியான மழை பொழிவான். அவன் வருமுன் முருகனுடைய சரண கமலாலயத்தில் ஒதுங்கி மரண பயந்தீர்க்கவேண்டும் என்பது இதன் குறிப்பாகும். இதனை திருஞானசம்பந்தப் பெருமானும் தன்னுடைய பாடலொன்றில் கூறுகிறார். அப்பாடல் –

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

புலன்ஐந்தும் பொறி கலங்கி, நெறிமயங்கி,
அறிவுஅழிந்திட்டு, ஐமேல்உந்தி
அலமந்த போதாக, அஞ்சேல்என்று
அருள் செய்வான் அமருங்கோயில்,
வலம்வந்த மடவார்கள் நடம்ஆட, முழவுஅதிர,
மழை என்றுஅஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரம்ஏறி முகில்பார்க்கும்
திருவை யாறே.

Related articles

Recent articles

spot_img