தெலுங்கில் : பி. எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
ராமாயணம் தொடர்ச்சி…
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் படைப்பு என்பது பூமியின் மேல் இல்லை என்ற கிறிஸ்தவ மதக் கதைகளை ஆதாரமாக நம்பிய பிரிடிஷ் ஆட்சியரால், மிகப் புராதன கலாசாரம் கொண்ட பாரத தேசத்தின் வரலாற்றை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றைக் கூறும் ராமாயணம், மகாபாரதம் நூல்களை அதனால்தான் பொய்களாக வந்தேறிகள் தீய எண்ணத்தோடு பிரச்சாரம் செய்தார்கள் என்ற விஷயத்தைப் பார்த்து வருகிறோம்.
பாரத தேசத்தின் ஆத்மநாதம் பாரதியம். இந்த பாரதியத்திற்கு மூலாதாரம் ஸ்ரீமத் ராமாணயமும் மகாபாரதமும். பாரதியத்தை அழிக்க வேண்டும் என்ற சதிகள் இஸ்லாம் ஆட்சியர் காலத்திலும் பிரிட்டிஷார் காலத்திலும் பெருமளவில் வேகம் பெற்றன.
ஹிந்து சமுதாயத்தின் வழிபாட்டு நூல்களை எதிர்ப்பதும் அவற்றை அவமதித்து வக்கிரமாக விளக்கி எழுதிய நூல்களுக்கு விருதுகள், பரிசுகள் அறிவிப்பதும் போலி மதச்சார்பின்மை பேசும் நம் அரசியல் ஆட்சியாளர்களுக்கு பிரிடிஷாரிடமிருந்து தொற்றிய நோய். கிறிஸ்தவத்தால் தூண்டப்பட்ட மீடியா, காங்கிரஸ், இடது சாரிகளுக்கு இது ஒரு கொண்டாட்டம்.
கிறிஸ்துவ மத தத்துவத்தில் பிடிவாதம் கொண்ட மதவாதிகளை கிறிஸ்தவ மிஷினரிகள் தம் ஏஜெண்டுகளாக, விலை கொடுத்து (ஆமாம்) வாங்கி, மொழி ஆய்வாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும், சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகள் மீது அனுதாபம் உள்ளவர்களாகவும் ‘மாரீச’ வேடதாரிகளாக மாற்றி பாரத தேசத்தில் பல்வேறு இடங்களுக்கு அனுப்பினார்கள்.
இவர்களுடைய ‘மிஷன்’ நம் தெய்வங்கள் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைக் கெடுப்பது, நம்முடையது மூட மதம் என்று பிரசாரம் செய்வது. இவர்களின் உண்மையான உருவம் தெரியாத அப்பாவிகளான நம் கல்வியாளர்கள் சிலர் அந்த பண்டித சிகாமணிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.
அவர்களில் ஒருவர் காமெல் புல்கே (1909-1982) என்பவர். இவர் ஹிந்தி மொழியில் தன் பணியத் தொடங்கினார். கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக ‘அமர்த்தப்பட்ட’ ஆங்கிலேய அதிகாரி புல்கே ஸ்ரீமத் ராமாயணத்தின் மீதும், வேதங்கள் மீதும் அங்குள்ள மக்களுக்கு இருந்த ஆதரவைப் பார்த்தார். “படைப்பில் அனைத்து தர்மங்களும் வேதத்திலிருந்து பிறந்தவை!” என்ற ஹைந்தவ நம்பிக்கையை கவனித்தார். காமெல் புல்கே இந்த நம்பிக்கையை தம் மதத்தின் மீது மாற்றுவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ‘ராமகதை’யை எழுதினார்.
உண்மையில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு புல்கே ராமகதையை எழுதினர். ராமர் பற்றிய குறிப்பு வேதங்களில் இல்லை என்ற கருத்தைக் கூறத் தொடங்கினார் புல்கே இந்த நூலின் மூலம்.
இந்த கிறஸ்தவர் பாரபட்சமாகச் செய்த அக்கிரமத்தை தோய்த்து உலர்த்திய ஒரு கட்டுரை ‘ராதாகிருஷ்ண தானுகா பிரகாஷ்’ அமைப்பினர் பதிப்பித்த ‘இராமாயண மீமாம்சம்’ என்ற நூலில் இடம்பெற்றது. இந்த நூலை எழுதியவர் வேறு யாரோ அல்ல… சகல மக்களின் நலனையும் விரும்பும் தத்துவதர்சி சுவாமி கரபாத்ரிஜி மகாராஜ் (1905-1980). இவர் அகில பாரதிய ராமராஜ்ய பரிஷத் நிறுவனர். காசியில் வசித்தவர். பகவான் ரமணமகரிஷி இவர் குறித்துக் கூறியுள்ளார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட இராமாயண மீமாம்சம் ஹிந்தி நூல் இரண்டாவது அத்தியாயம் 34ம் பக்கத்தில் காமெல் புல்கேவின் ராமகதையை பகுப்பாய்வு செய்துள்ளார் சுவாமிஜி.
இந்த சந்தர்பத்தில் மாக்ஸ்முல்லரைக் குறிப்பிட்டு, “ருக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தன்னிஷ்டப்படி வியாக்கியானம் எழுதியதன் மூலம் ஹிந்து தர்மத்தை பலவீனப்படுத்தி, கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு அனுகூலமான சூழலை ஏற்படுத்திக் கொண்டது போலவே, புல்கே எழுதிய இந்த இராமாயணக் கதையின் அமைப்பிலும் தவறான வழிமுறை உள்ளது” என்றார் சுவாமிஜி.
வேதங்களில் ராமாயணம் இல்லை என்று கூறுவதும், ராமாயணத்தில் உள்ள பாத்திரங்களைப் பற்றி வேதங்களில் இருப்பதைப் புரிந்து கொள்ள இயலாமல் ‘வேதங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே’ என்று விளக்கியிருப்பதும் தவறு என்று சுவாமிஜி குறிப்பிட்டார். வேதங்கள் ‘அபௌருஷேயங்கள்’ என்ற சத்தியத்தை மறந்து ருக்வேத மந்திரங்களை தவறாக உதாரணம் காட்டுவது, தவறாக வியாக்கியானிப்பது பற்றி கரபாத்ரி சுவாமிஜி விமர்சித்தார். இக்ஷ்வாகு அரசர்களின் பெயர், தசரதரின் பெயர் வேதங்களில் இருப்பதைக் கூட சரியாக புரிந்து கொள்லாமல் எழுதியிருப்பதை சுவாமி விமர்சித்தார்.
கோல்ட்மேன் என்ற வெளிநாட்டவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவருடைய நூலில் முழுவதும் ஆதியோடு அந்தம் (பலஸ்ருதியோடு கூட) வியாகரணத்திலும் மொழிபெயர்ப்பிலும் வலியச் செய்த தவறுகள் ஏராளம் உள்ளன. ஹிந்து சமுதாயத்தில் வேற்றுமை ஏற்படுத்தி பிரிக்க வேண்டும் என்ற தீய எண்ணம் கோல்ட்மேன் எழுத்தில் காணப்படுகிறது. வால்மீகி மகரிஷி கூறிய சொற்களுக்கு தன் வக்கிரமான வியாக்கியானத்தை கற்பித்து எழுதிய பல இடங்கள் இந்த நூலில் தென்படுகின்றன.
‘பிரம்மா’ என்ற சொல்லைப் பற்றிய சரியான புரிதலும் இன்றி, சமஸ்கிருத மொழியின் மீது முழுமையான அறிவும் இன்றி மொழிபெயர்ப்பு செய்ததால் இந்த புல்கே, கோல்ட்மேன் போன்றோர் செய்த தர்ம துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல.
இவர்களின் வாரிசுகளும் மெக்காலேவின் மானசிகப் புதல்வர்களும் தொலைக்காட்சியில் செய்யும் விவாதங்களையும் புத்தகங்களில் எழுதும் விபரீதங்களையும் பார்த்து வருகிறோம்.
“ராமாயணமும் மகாபாரதமும் கவிஞனின் கற்பனை!” என்று விமரிசனம் செய்பவர்களே… வாலிக்கும் சம்புகனுக்கும் வக்காலத்து வாங்கிப் பேசுவது விசித்திரம்! யார் எத்தனை விதண்டாவாதம் செய்து விமர்சித்தாலும் ஸ்ரீராமனின் சரிதம் மக்களிடம் நிலைத்து நிற்கும். நாட்டுப்புற பாடல்கள் மூலம் பாமரர்களிடமும் பண்டிதர்களிடமும் ஸ்ரீராம சரித்திரம் பல்லாயிரம் ராம கதைகளாக வியாபித்து தர்மத்தை போதித்து வரும் என்பதில் ஐயமில்லை.
கவிசாம்ராட், விஸ்வநாத சத்யநாராயணா தெலுங்கில் படைத்த ராமாயண கல்பவிருக்ஷம் காவியத்தில் கூறினாற்போல்,
“அச்சமைன அம்ருதமமருலு த்ராவினா
ரோயி தானிகே னசூயபடக
பரம மௌனியைன வால்மீகி க்ருத ராம
ஸத்கதா சுதாரஸம்பு திராவி”
இந்த அமிருத ரசத்தை பிரபஞ்சத்திற்குப் பகிர வேண்டும். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போன்ற மக்கள் மனம் கவரும் அரசன் வர வேண்டுமென்றால் ராமாயணம் நம்மில் நித்திய பாராயண நூலாக வேண்டும்.
“ஆராதனாய லோகஸ்ய” என்று கூறக் கூடியவர், எண்ணக் கூடியவர் ஜனநாயக யக்ஞத்திலிருந்து வெளிப்பட வேண்டுமென்றால் இராமாயண கதாநாயகனின் தெய்வீகத் தூண்டுதல் ஒன்றே வழி.
தற்கால பாரதத்தில் உள்ள இளைஞர்கள் தன்னம்பிக்கை இழந்து தற்கொலைக்குத் துணிகின்ற பின்னணியில் ராமாயணத்தில் உள்ள பல்வேறு பாத்திரங்கள் தைரியத்தை கற்றுத் தருவார்கள். உலகம் போற்றும் தெய்வம் ஸ்ரீராமனை சிறு வயதிலேயே ஆதரிசமாக உள்ளத்தில் ஏற்று வளரும் புது தலைமுறை உருவாக வேண்டும்.
“எந்த காலத்திலேயோ வாழ்ந்த ராமனின் கதை எப்போது எதற்கு?” என்று கேட்பவர்களுக்கு பதிலாக திரு. ஏலூருபாடி அனந்தராமய்யா இவ்வாறு கூறுகிறார், “தந்தை சொல்வதை மகன் கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரு மனிதனுக்கு ஒரே மனைவி என்ற நியமம் இருக்க வேண்டுமா, வேண்டாமா? அண்ணன் தம்பிகள் தர்மத்தின்படி ஒருவரின் கஷ்டசுகங்களில் மற்றவர் பங்கு கொள்ள வேண்டுமா, வேண்டாமா? பணி புரியும் ஊழியர்கள் தங்கள் எஜமானருக்கு தர்மம் எது? அதர்மம் எது? என்று எடுத்துக் கூறும் சுதந்திரம் பெற்று இருக்க வேண்டுமா, வேண்டாமா?”
இவ்வாறு பலப்பல கேள்விகளுக்கு அவரவர் கொடுத்துக் கொள்ளும் பதில்களைப் பொறுத்து ராமாயணத்திலுள்ள ஆதரிசம் எப்படிப்பட்டதோ தெரியவரும்.
அதனால்தான் இராமாயணதை பாராயண நூல் என்கிறோம். எப்போதும் நினைத்துப் பார்க்க வேண்டிய தர்மங்கள் அடங்கிய நூல் ராமாயணம்.
இராமாயண காலத்தைச் சேர்ந்த ஆதாரங்கள்:-
டில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஈஸ்ட்ரோலியன் பயோ சென்டர் ஆந்த்ரோபாலாஜி துறையினர் செய்த ஆய்வில் ராமாயணத்தைப் பற்றிய ஆதாரங்களும் உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தன.
பிரபல விஞ்ஞானி டாக்டர வட்லமூடி ராகவேந்திரராவு தலைமையில் இந்த ஆய்வுகள் நடந்தன.
மரபியல் ரீதியான ஐந்த ஆய்வுகளில் ராமாயணத்தில் உள்ள அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா காண்டங்களில் வர்ணித்த வனவாசிகளின் மேல் இந்த ஆய்வுகள் நிகழ்ந்தன.
கோண்டுகள், பில்லுகள், கோயர்கள் முதலான வனவாசிகளின் மரபணுக்கள் தொடர்பான இந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி ராமாயணம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாற்று நிகழ்வாக நிரூபணமானது.
இந்த வனவாசிகளின் மக்கள்தொகை சுமார் நாற்பது லட்சமாக இருந்தது என்றும், இவர்கள் அதிலாபாத் (தெலங்கானா) முதல் பல மாநிலங்களில் பரவி இருந்தனர் என்றும் டாக்டர் வட்லமூடி ராவேந்த்ரராவு குழுவனர் குறிப்பிட்டனர்.
ராமாயணம் உண்மையாக நடந்ததா இல்லையா என்ற சர்ச்சை அண்மையில் அதிகமாகின்ற பின்னணியில் இந்த ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.
Source: ருஷிபீடம், ஜுன், 2019