கண்ணனைக் கண்டிடவே நானும் கடுந்தவம் செய்துவந்தேன்! சொப்பனத்தில் வந்து நின்றான் கண்டு சொக்கித்தான் போனேனடி! சட்டெனவே தோன்றிடுவான் பார்த்தால் சடுதியிலே ஒளிந்திடுவான்! கைகூப்பி வேண்டிநின்றால் சற்றே திரைவிலக்கி வெளிவருவான்! சுட்டுவிரல் காட்டிநின்றேன் மனச் சுமைகளை இறக்கிவைத்தேன்! சிரிக்கின்ற அழகுகண்டு நானும் சித்திரமாய் நின்றேனடி! சந்தனமும் பூசிவிட்டேன் முகமும் சந்திரனாய் ஒளிர்ந்ததடி! சூரியனாய்ச் சுட்டெரிக்கும் என்விழிகள் அவனால் சுடர்விளக்காய் மாறுதடி! சங்கெடுத்து முழங்கிநின்றான் நல்லார் சங்கடங்கள் தொலைந்ததடி! சக்திகொண்டோர் தவறிழைத்தால் கையில் சக்கரத்தை எடுத்திடுவான்! சுற்றுகின்ற உலகைஉண்டு வாயில் சூசகமாய்க் காண்பித்தான்! தூண்டில்விழி கண்டபின்னே என்மனத் துயரங்கள் மறைந்ததடி! கண்விழித்து எழுந்துநின்றேன் கனவோ கலைந்தே போனதடி! இக்கனா மீண்டும்காண மனமோ ஏக்கத்தில் தவிக்குதடி! என்ஏக்கம் தீர்த்திடவே கண்ணன் என்னருகில் வருவானடி! கனவினிலே வந்தஅவன் ஒருநாள் காட்சியிலும் நிறைவானடி!
ராதையாய் நான்…
Popular Categories



