நம் அறிமுகத்தின் உதயத்தில் கோளாறோ? உன் அன்பில்லா இதயத்தில் கோளாறோ? நம் பார்வைகளின் பதியத்தில் கோளாறோ? என் இளகியமனம் இதயக்கோளாறில் இப்போது நிற்குதடி! உன் வெள்ளந்திச் சிரிப்பு மின்னல் கீற்றாய்த் தாக்கிய போதெல்லாம் நான் பைத்தியமாய் நினைவழிந்தேன்! நீ நலம்குன்றி நலிந்து முகம் வெதும்பிக் கிடந்த போதெல்லாம்… நான் பத்தியத்தைக் கைக்கொண்டேன்! இரவில் கண்கூசும் சாலை விளக்குகளின் வெளிச்சம்… ஆனாலும், அழகாய்த் தலைகாட்டும் முழுநிலாவை முழுதாய் ரசித்திருப்பேன்… ஆயிரம் பெண்கள் என்னைக் கடந்து போய்விடினும் உன்னை மட்டுமே ரசித்ததுபோல்! பூத்துச் சிரிக்கும் புதுமலர்களின் நாசி துளைக்கும் வாசனை… ஆனாலும், இருவிரலில் பிடித்திழுத்து இதயத்தில் பொருத்திப் பார்க்கும் ரோஜாவை முகர்ந்திருப்பேன்… ஆயிரம் மலர்கள் கொட்டிக்கிடந்தாலும் அழகாய்க் கட்டி உன் கூந்தலில் ஏறியிருக்கும் ஒருமுழம் மல்லியை வாசம் பிடித்ததுபோல்! பார்வையின் ஆழத்தில் உன்னை ரசித்த பின்னே… உலகு பிடிக்கவில்லை! நிலவு பிடிக்கவில்லை! இரவு பிடிக்கவில்லை! மலர்கள் பிடிக்கவில்லை! உன் முகம் அன்றி வேறெதுவும் அழகாய்த் தோன்றவில்லை! ஆனாலும் பெண்ணே… நம் அறிமுகத்தின் உதயத்தில் கோளாறோ? உன் அன்பில்லா இதயத்தில் கோளாறோ? நம் பார்வைகளின் பதியத்தில் கோளாறோ? என் இளகியமனம் இதயக்கோளாறில் இப்போது நிற்குதடி!
Published:

