எந்த ஒன்றைச் செய்தாலும் – இவர்
ஏதோ ஒர்குறை சொல்கின்றார்
வந்த மனிதர் முன்பாக – ஒரு
வறட்டுச் சிரிப்பு உதிர்க்கின்றார்
அடுத்த வீட்டுக் குழந்தையிடம் – ஒரு
அயலான் போல நடக்கின்றார்
எடுத்து பணத்தை ஏழையர்க்கு – அட
ஏன்நான் தரணும் என்கின்றார்
பெற்ற பிள்ளை ஆனாலும் – பணப்
பித்தாய்க் காட்டிக் கொள்கின்றார்
குற்ற உணர்வே இல்லாமல் – தன்
குடும்ப உறவைப் பழிக்கின்றார்
செல்லும் செல்வப் பைக்குள்ளே – இவர்
சிக்கித் தவித்துக் கிடக்கின்றார்
அல்லும் பகலும் உறக்கமின்றி – உயிர்
அற்ற பிணமாய் நடக்கின்றார்
முற்றும் துறந்த முனிபோல – அட
முகத்துத் தாடி நரைத்தாலும்
கற்ற வித்தைக் கபடமெனில் -ஒரு
காலம் கள்ளன் பிடிபடுவான்
பக்தி வேடம் போடுவதால் – மனம்
பற்று விட்டு ஓடிடுமா ?
பத்தி ஏற்றி வைத்தாலும் – மன
பந்த நாற்றம் போய்விடுமா?
கவிதை: மீ.விசுவநாதன்




