சென்னை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சோலியை முடியுங்கள் என்று இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வினர் போராட்டங்களை நடத்தினர்.
நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு, நேற்று மாலை தர்னா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் இல.கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் போராட்டம் நடத்திய ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில், கைதான பாஜக.,வினர் 311 பேர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.