ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி, தாயின் கண்முன்பே துடிக்கத் துடிக்க அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
திருச்சி ஸ்ரீரங்கம் கீழஉத்தர வீதியைச் சேர்ந்தவர் மாதவன். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவருடைய மனைவி சொர்ணலட்சுமி ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகிறார். இவர்களின் மகள் தீபரேகா (வயது 8) ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று தை வெள்ளிக்கிழமை அதிகாலை தாயும், மகளும் எழுந்து வீட்டு வாசலில் பெருக்கி தண்ணீர் தெளித்த நிலையில், சிறுமி தீபரேகா கோலம் போட அமர்ந்துள்ளார். தனது மகள் கோலம் போடும் அழகை ரசித்த படியே, சொர்ணலட்சுமி அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் திடீரென சிறுமியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
தனது மகள் மீது கார் மோதிச் சென்ற அதிர்ச்சியில் சொர்ணலட்சுமி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தீபரேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் அந்த காரை ஓட்டியது தெரிய வந்தது. அதிகாலை நேரத்தில் அவ்வளவு வேகமாக காரை இயக்கியதில், ஒரு தாயின் கண் முன்பே சிறுமி உயிரிழந்தது, ஸ்ரீரங்க மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது துயரத்தை பகிர்ந்து கொண்டனர்.