பொருளாதாரம், வேலையின்மை போன்ற பிரதானப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப கொண்டுவரப்பட்டவையே #CAA , #NRC , #NPR ஆகியவை.
இவற்றுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கியது. கோடிக்கணக்கான மக்களின் கையெழுத்து மத்திய அரசின் மனதை மாற்றும் என நம்புகிறோம் #SignatureAgainstCAA – என்று தனது டிவிட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம், முரசொலி மூலப்பத்திரம் வாடகை பத்திரமாகி, இப்போது முரசொலியை பத்திரப் படுத்தவும், திமுக.வுக்கு ஏற்பட்டு ஹிந்து எதிர்ப்பு மனோபாவத்தை மறக்கடிக்கவும், பெரிய வெற்றியை எதிர்பார்த்து அதிமுக.,ஐக் காட்டிலும் குறைந்த இடங்கள் பெற்று தோல்வி அடைந்த உள்ளாட்சித் தேர்தல் தோல்வியை மறக்கடிக்கவுமே ஒரு கையெழுத்து இயக்கத்தை திமுக., நடத்துகிறது என்று பதில் கொடுத்து வருகின்றார்கள் அரசியல் மட்டத்தில்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு ஆகியோர் இதை நேற்று தொடங்கி வைத்தனர்.
பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக உருவாக்கப்பட்ட படிவத்தில் முதலாவதாக மு.க.ஸ்டாலின் தனது கையெழுத்தை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து கொளத்தூரில் மக்களிடம் வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெற்றார். மேலும், குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்த கையெழுத்து இயக்கம் வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. ஒரு கோடி கையழுத்து வரை பெறப்பட்டதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் குடியரசுத் தலைவரை சந்தித்து கையெழுத்து படிவங்களை வழங்க உள்ளனர்.