
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்று தொடர வாய்ப்பு இருக்கிறது. தமிழக உள் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று , இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சென்னை அடையார், மத்திய கைலாஷ், திருவான்மியூர், பெசன்ட் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, ஓட்டேரி உள்ளிட்ட பல பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இன்று காலை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையின் முக்கிய இடங்களான அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு பகுதிகளில் தொடர்ந்து கனமழை மழை பெய்து வந்தது.
தமிழகத்தில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று வெளுத்து வாங்கிய கனமழை மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வரும் 30 ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


