நெல்லை ஸ்ரீபுரத்தில் … பேருந்து கிடைக்காமல் குழந்தைகளுடன் பஸ் நிறுத்தத்தில் தவித்தார் அந்தப் பெண். பார்த்த மாத்திரத்தில், ஓடிச் சென்று உதவினார், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர்!
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பஸ் நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை இன்று இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் நின்று கொண்டிருந்தார். இதனை கவனித்த அந்த வழியாகச் சென்ற ஒருவர் அந்தப் பெண்ணிடம் பேருந்துக்காக காத்து நிற்கிறீர்களே இனிமேல் பேருந்து வராது. நீங்கள் எப்படி ஊருக்குச் செல்லப் போகிறீர்கள் என கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் பேருந்து வரும் என நினைத்து காத்திருக்கிறோம் என்றார். சிறிது நேரத்தில் பேருந்துக்காக தவிக்கும் குடும்பம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஒரு தகவலைப் பெற்றார்.
உடனடியாக அவர் மைக் மூலம் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பேருந்துக்கு நின்றபடி, தனியாக நிற்கும் பெண்மணி குறித்த தகவல் அவர்களுக்குச் சென்றது. இதையடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள் ஜீப்பில் விரைந்து வந்து அவர்கள் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டனர்.
பஸ் ஏதும் இனி வராது என்று கூறி விட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். ஆனால் அந்தப் பெண்மணியோ, தம்மிடம் வெறும் நூறு ரூபாய் தான் உள்ளது என்றும், இந்த நேரத்தில் ஆட்டோவுக்கு பணம் கொடுத்து செல்லும் அளவுக்கு தனக்கு இயலாத சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து போலீஸார் தகவல் தெரிவிக்கவே, நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், தாய் மகன்கள் என அந்த மூவரின் ஆட்டோ பயணத்திற்கான முழுப் பணத்தையும் தாம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் போலீஸாரின் வற்புறுத்தலில் அந்தப் பெண்ணும் ஆட்டோவில் ஏறும் போது, போலீசார் ஆட்டோவுக்கான பயணச் செலவை கொடுத்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ஆட்டோவில் புறப்பட்டார்.
இது குறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தெரிவிக்கையில், “காவல்துறையினர் நமக்கு உதவுவார்கள்; நம்மைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் வரவேண்டும்! அதனை ஏற்படுத்துவதை என் கடமையாக நினைக்கிறேன்” என்றார்!