
சென்னை:
துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம் கழகத்தை காப்போம் என டுவிட்டரில் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
அ.தி.மு.க.,வின் இரு அணிகள் நேற்று இணைந்ததைத் தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் தனக்கு உடல் நலக் குறைவு என்று கூறி நினைவிடத்துக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார். ஆனால், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்கே வந்து சுமார் 20 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டனர்
இந்நிலையில் இன்று காலை தமிழக ஆளுனரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் மாளிகை வந்தனர். அவர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக கூறியிருந்தனர். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை எனவும் அதில் கூறியிருந்தனர்.
எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.ஜே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன்,உமாமகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர்.
முன்னதாக, டிடிவி தினகரன் தனது டுவிட்டரில், “மீடியா நண்பர்களுக்கு… காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23ந் தேதி உங்களை சந்திக்கிறேன். இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.
1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம். அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்! என்று கூறியுள்ளார்.



