மதுரையில் திருமணமான மூன்றே மாதத்தில் பெண் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் டாக்டர் அசோக் விக்னேஷ். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறையில் எம்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்த டாக்டர் ஹரிணி (26)க்கும் அசோகிற்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி ஹரிணிக்கு உடல்வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்த நிலையில் வலி நிவாரணி ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் காய்ச்சல் அதிகமாகவே மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ஹரிணி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்து நேற்று உறவினர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அவனியாபுரம் போலீசார் பிரேதப்பரிசோதனை அறிக்கையை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆன நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.