நெல்லையில் பாறையை தகர்ப்பதற்கு வைத்த வெடிகுண்டு வெடித்து ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல லட்சம் ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்காக குழாய்களை கொண்டு செல்ல சிமெண்ட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தூண் அமைக்கும் பகுதியில் ஆற்றில் பாறை இருந்ததால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அஜாக்கிரதையாக பாறையில் வெடிவைத்து வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
பாறைகள் வெடித்து சிதறியதில் பெரிய கல் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மேல் பகுதி கிழித்துக்கொண்டு உள்ளே விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயத்துடன் உயிர்தப்பினார்.
அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.