சென்னையில் ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்கு வரும் நபர்களுக்கு முடிவு கிடைக்கும் வரை தாமதிக்காமல் அப்போதே கொரோனா கிட் வழங்கப்படும் என்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் 28,272 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வைரஸ் பாதிப்பு ஏழாயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தலைநகரில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
சென்னையில் கொரோனா சிகிச்சை முறை பற்றி மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி கூறுகையில், “சென்னையில் மொத்தம் 59 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதுவரை இவர்கள் யாருக்கு எல்லாம் கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்ற தகவலை மாநகராட்சிக்கு அளிக்காமலிருந்தனர்.
ஆனால் இனிமேல் பேரிடர் சட்டத்தின் கீழ் யாருக்கு கொரோனா என்பதை அவர்கள் முதலில் மாநாகரட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் முறையாகப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு வீடுகளில் தனிமைபடுத்தல் போதுமா அல்லது மருத்துவ சிகிச்சை தேவையா என்பதைத் தீர்மானிக்க முடியும்.
அதேபோல ஒருவர் கொரோனா பரிசோதனை செய்தால், அவருக்கு முடிவுகள் கிடைக்க இரண்டு நாட்கள் வரை ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வெளியே செல்கின்றனர்.
இதன் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம். கொரோனா பரிசோதனை மையங்களுக்கு வரும் நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலே, அவர்களுக்கு மருந்துகளை உள்ளடக்கிய கொரோனா கிட் வழங்கப்படுகிறது.
ஒருவருக்கு பாசிடிவ் முடிவுகள் வரும் வரை காத்திருந்து, அதன் பின்னர் அவருக்குத் தேவையான மருந்துகளை வழங்கி, சிகிச்சையை ஆரம்பிப்பதற்குள், அவருக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துவிடும்.
இதனால் டெஸ்ட் செய்த அன்றே நபர்களுக்கு கிட் வழங்க முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு கொரோனா நெகடிவ் முடிவுகள் வந்தாலும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களை நேரடியாக வீடுகளுக்குச் சென்று சிகிச்சைகள் அளிக்க உள்ளோம்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் ஊரடங்கு போல் இல்லாமல் பொதுமக்கள் இயல்பாக வெளியே நடமாடுகின்றனர்.
வைரசின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஊரடங்கு வெற்றி பெறும். அன்புடன் கேட்கிறோம், அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்” என்று அவர் தெரிவித்தார்.