
சென்னை: உச்ச நீதிமன்றம் கூறிய படி காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் ஏப்.2ம் தேதி, திங்கட்கிழமை, அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக சார்பில் ஏழைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், இந்த உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடாக உள்ளது. காரணம், ஏற்கெனவே தமிழகத்துக்காக வழங்க வேண்டும் என்று கூறி காவிரி நடுவர் மன்றம் செய்திருந்த பரிந்துரைகளை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கான நீரின் அளவைக் குறைத்தது. இதனால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது தமிழகத்தில்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம். ஆனால் அது கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மட்டத்திலும் அழுத்தம் கொடுக்கப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


