திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டினார்.
திருநெல்வேலி பேட்டை சர்தார்புரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். நெல்லை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சிவசக்தி, வீடுகளில் பணி செய்து வருகிறார். இவர்களது மகன் சுதாகர் (20) நெல்லை சாப்டர் பள்ளியில் 2016-ல் பிளஸ் டூ பயின்றார். 1046 மதிப்பெண் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், 161 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவ சீட் கிடைக்கவில்லை.
மீண்டும் தனியார் நிறுவனத்தில் நீட் பயிற்சி பெற்றவர் 2018ல் நடந்த நீட் தேர்வில் 303 மதிப்பெண் பெற்றார். தற்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளார்.
தமிழ் மீடியத்தில் பள்ளியில் பயின்ற சுதாகர், ஆங்கிலத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். துப்புரவு தொழிலாளியின் மகன் சுதாகர், குடும்பம் வறுமையான சூழலிலும் இரண்டு ஆண்டு முயற்சிக்கு பிறகு மருத்துவ சீட் பிடித்தார்.
இதை அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா, சுதாகரையும் அவரது பெற்றோரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி ஊக்குவித்தார்.


