பிறந்த நாளில் சோகம்! கார் விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினிக்கு ஊடகத்தினர் கண்ணீர் அஞ்சலி!

Published:

shalini reporter2 horz - 2026திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள,பள்ளபட்டியில் வசிக்கும் சின்ன மருதுபாண்டியன் மகள் அங்கையர்கரசி, சென்னை மாலை முரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

அவரைப் பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு, பள்ளப்பட்டியிலிருந்து சென்னை செல்ல கிளம்பினார்கள். மதுரை – திண்டுக்கல் சாலையில் பொட்டிகுளம் அருகில் வந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து இடது புற பள்ளத்தில் விழுந்ததில் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் செய்தியாளர் ஷாலினி மரணம் அடைந்தார். அவர் தனது பிறந்த நாளை அன்றுதான் கொண்டாடினார்.

shalini reporter accdent2 - 2026

இந்த விபத்து தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலைமுரசு டிவி செய்தியாளர் ஷாலினியின் கோர மரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.

shalini reporter accdent - 2026

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி: மாலைமுரசு தொலைக் காட்சியின் நிருபர் ஷாலினி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் நிலைகுலைந்து போனேன். தினமும் காலைநேரத்தில் நான் அலுவலகம் கிளம்பும் முன் எனது வீட்டருகே செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அப்படியான சந்திப்புகளின் போது, துடிப்புடனும், பொறுப்புடனும் கேள்விகளை ஏந்தி வரும் அந்த சின்னஞ்சிறு பெண் நிருபர் ஷாலினி என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பார். பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து, செய்தித்துறையில் சாதித்திட பல கனவுகளை கண்டிருந்த அந்த இளம் செய்தியாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார், அதுவும் பிறந்தநாளில் உயிரிழந்தார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது.

ஷாலினியின் உருவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். நாளை செய்தியாளர் சந்திப்பின் போது ஒளிரும் கண்களுடனும், சிரித்த முகத்துடன், வலுவான கேள்விகளை ஏந்திவரும் ஷாலினியை எங்கே என்று தேடுவேன்.

செய்தியாளர்களே, நண்பர்களே அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது, சமூகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் பெரிய சொத்து. பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளுங்கள். விபத்தில்லா நெடுவாழ்வு வாழுங்கள். உயிரிழந்த ஷாலினியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.

போய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா…

இரங்கலுடன்
D.ஜெயக்குமார், தமிழக அமைச்சர்

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

முதல்வர் எடப்பாடி இரங்கல்- நிதியுதவி அறிவிப்பு: இதற்கிடையே ஷாலினியின் மறைவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மரணமடைந்த ஷாலினி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.

ஷாலினி கடைசியாகக் கொண்டாடிய பிறந்த நாளில்…

பத்திரிகையாளர் ஷாலினியின் மறைவுக்கு ஊடக உலகத்தினர் பலரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களையும் கண்ணீரையும் மறைந்த பெண் நிருபருக்கு காணிக்கை ஆக்கி வருகின்றனர்.

ஜூனியர் விகடனில் ஆசிரியராகப் பணிபுரிந்த பத்திரிகையாளர் திருமாவேலன் வரைந்த கண்ணீர் மடல் இது…

ஒரு விபத்து ஒரு பத்திரிக்கையாளரின் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. நான்கு பத்திரிக்கையாளர்களின் எதிர்காலத்தை துயரமானதாக ஆக்கி இருக்கிறது.
இந்தத் தகவலை வினோத்ராஜ் அனுப்பியபோது ஏற்பட்ட அதிர்ச்சி தமிழ் அதை விவரித்தபோது அதிகமானது.

இறந்து போன பத்திரிக்கையாளர் ஷாலினிக்கு அன்று தான் பிறந்தநாள். இன்னொரு பத்திரிகை தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்புகிறார்கள். இன்றைய தினம் அவர்கள் அனைவரும் வேறொரு நிறுவனத்தில் பணிக்குச் சேர வேண்டும்.

காலம் இவர்களது கனவை நிறைவேற்றித் தரத் தயாரான நேரத்தில் விபரீத விபத்து நடந்துள்ளது. சதீஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளன் என்ற தொழிலே போராட்டமானது. தனக்கானது அல்ல. சமூகத்துக்கானது. ஷாலினியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. சமூகத்துக்கானது.

இந்த நேரத்தில் சொல்வதற்கு இருப்பது ஒன்றுதான்.. செய்திக்காகவும் விருப்பத்தின் பொருட்டும் தம்பி/ தங்கைகள் அதிகமாய் பயணம் செல்கிறார்கள். அவசரப் பயணம்/ விரைவுப் பயணம்/ இரவுப் பயணம் எப்போதும் வேண்டாம்.

நம்மைவிட நாம் செல்லும் வாகனம் சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். என்ன தான் திறமையாக வாகனம் ஓட்டத் தெரிந்தவராக இருந்தாலும் தூரப் பயணங்களுக்கு தனி ஓட்டுநர்களை வைத்துக் கொள்ளுங்கள். பயணங்கள் இனிமையானது மட்டுமல்ல துயரமானது.

பத்திரிகையாளர் ஷாலினியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், தமிழக அரசு நிதி உதவி அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கை…

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

shalini tnja statement - 2026

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img