திருநெல்வேலி: தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு அரசு, அரசுத் துறைகள் ஒத்துழைப்பு கிடையாது என்று கூறி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். இது நெல்லை மாவட்டத்தில் கடும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
தாமிரபரணியில் மகா புஷ்கர விழா வரும் அக்.,11 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை குரு பெயர்ச்சியை முன்னிட்டு பன்னிரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. பன்னிரண்டு நதிகளில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகாபுஷ்கர விழா இந்த முறை தாமிரபரணியில் வருகிறது. 144 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் விழா இது என்பதால் தாமிரபரணியில் நீராட நாடு முழுவதிலும் இருந்து அன்பர்கள் முன்னமேயே ரயில்களில் டிக்கெட் புக் செய்து நெல்லை மாவட்டத்துக்கு வருவதற்குத் தயாராக உள்ளனர்.
தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பாபநாசம் முதல் நதி கடலில் கலக்கும் புன்னைக்காயல் வரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தக் கட்டங்கள் தாமிரபரணி நதியில் உள்ளன. இந்த விழாவுக்காக முன்னேற்பாடுகளுடன் பல தீர்த்தக் கட்டங்களையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு தன்னார்வக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பல்வேறு தீர்த்தங்களில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு குழுக்கள் படித்துறைகளை சீரமைத்து வருகின்றனர். அரசு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் ஒரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதன் பிறகு வேறு எந்தப் பணிகளும் மேற்கொள்ளப் படவில்லை.
இதனிடையே நெல்லை அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணிக் கரையில் உள்ள முக்கியமான அனைத்து கோயில்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்துவதற்கு பல்வேறு அமைப்பினரும் அனுமதி கேட்டுள்ளனர். குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிக்கு செல்லும் பாதை போதுமான வசதி இல்லை. அங்கு அதிகமான பக்தர்கள் கூடுவதற்கும் இடவசதி யில்லை. பருவமழை காலத்தில் தாமிரபரணியில் அதிக தண்ணீர் செல்லும்போது நீராடுபவர்களை பாதுகாப்பதும் சிரமம். நெரிசலான அங்கு புஷ்கர விழா நடத்த இயலாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் தைப்பூச மண்டபம் பகுதியிலும் தாமிரபரணி ஆழமாக உள்ளது. அங்கு நீர்ச்சுழல் இருப்பதால் பலர் மூழ்கி இறந்துள்ளனர் .அங்கு நீராடுவதற்கு ஏற்ற இடம் இல்லை. எனவே ஆட்சியரின் உத்தரவின்படி கோயில் மண்டபங்கள், படித்துறைகளை புஷ்கர விழாவிற்கு வழங்க வேண்டாம் என கோயில் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புஷ்கர விழாவிற்காக கோயிலில் இருந்து சுவாமியை எழுந்தருள செய்வது ஆகம விதிகளுக்கு மாறானதாகும் என இணை ஆணையர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
அவரது சுற்றறிக்கை இதோ…
ஆட்சியர் ஆலோசனையின் பேரில், புஷ்கர விழாவிற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டாம் என தெரிவித்திருப்பது புஷ்கர விழாவிற்கு ஏற்பாடு செய்து வருபவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமிரபரணி புஷ்கரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கம்யூனிஸ, கிறிஸ்துவ அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அவற்றை பரிசீலனை செய்துள்ள மாவட்ட ஆட்சியர், நெல்லை அறநிலையத் துறை இணை ஆணையரின் சுற்றறிக்கையின் படி பார்த்தால், கம்யூனிச இயக்கங்கள் கேட்டுக் கொண்ட படியே ஒரு முடிவினை எடுத்துள்ளதாகக் கருதவே இடமளிக்கிறது.
நாட்டின் அனைத்து இடங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொள்ளும் ஒரு ஆன்மிக விழாவை நடத்துவதற்கு நெல்லை மாவட்டத்தில் நிர்வாகப் பணி புரியும் தன்னால் இயலாது என்று இயலாமையை வெளிப்படுத்தியுள்ளாரா ஆட்சியர் என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.
மேலும், மாவட்ட நிர்வாகத்தாலும், அறநிலையத்துறையாலும் இந்த விழாவை நடத்த இயலாது என்று தங்களது இயலாமையை ஒப்புக் கொள்வது, நிர்வாகம் செய்வதற்கு லாயக்கற்ற தன்மையையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்.
ஆனால், ஆட்சியர் சொன்னது என்னவோ இரு படித்துறைகளில் மட்டுமே கூடாது என்பது. அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கையில் எந்த மண்டபத்தையும் கோயில் இடங்களையும் வழங்க வேண்டாம் என்று ஆட்சியர் பெயரையே மேற்கோளிட்டுக் காட்டுவதால், இது ஆட்சியருக்கே அவமானம் என்பதை இணை ஆணையர் பரஞ்சோதி உணர்ந்தாக வேண்டும் என்கின்றனர் ஆன்மிக அமைப்பினர்.




