சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப் பட்டதை அடுத்து அந்த இதழில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள் சிலரையும் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப் படுகிறது. முன்னதாக, நக்கீரன் ஆசிரியர் கோபாலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் விடுவிக்கப் பட்டார்
நக்கீரன் கோபால் மட்டுமில்லாமல் அந்த இதழில் பணியாற்றும் சில ஊழியர்கள் மீதும் எஃப்ஐஆர் பதியப்பட்டு இருக்கிறது. அட்டைப் படத்தை வடிவமைத்தவர், புகைப் படக்காரர் என்று சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வகையில் 5 ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதன்படி, குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல் படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதனிடையே, 124 சட்டப்பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்வது இந்தியாவிலேயே முதல்முறை என்றும், வழக்கின் கீழ் நீதிமன்ற காவலுக்கு அனுமதித்தால் தவறான உதாரணமாகிவிடும் என்றும், நக்கீரன் கோபால் மீதான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்து என்.ராம் வலியுறுத்தினார்.
124 சட்டப் பிரிவு சொல்வது என்ன?
சட்டப் பிரிவு 124ன் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்களின் பணிகளை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப் பட்டதே பிரிவு 124. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் பணிகளை தவறாக சித்திரித்தல் அல்லது ஆதார பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகளை பிரசுரித்தல் மற்றும் அதனை வெளியிடுதல் மூலம் ஆளுநரையோ, குடியரசுத் தலைவரையோ அவர்களது பணியை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் இடையூறு செய்தல் என பல குற்றச்சாட்டுகளை குறிப்பிடுகிறது இந்த சட்டப் பிரிவு 124.
இந்தக் குற்றத்திற்காக அதிக பட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கூடிய, ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகவும் அபராதத் தொகையையும் விதிக்க இந்த சட்ட விதி அனுமதி அளிக்கிறது.
இந்த சட்டப்பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவரை எந்தவித பிடியாணையுமின்றி கைது செய்யவும் அவர்களை விசாரிக்கவும் போலீசாருக்கு அதிகாரம் அளித்துள்ளது. இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெறத் தேவை இல்லை. அதற்கான கட்டாயமில்லை.
அப்படிப் பட்ட குற்றமாக இல்லாத பட்சத்தில் பிடியாணையின்றி குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் இல்லை. மேலும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் விசாரணையையும் மேற்கொள்ள முடியாது.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மட்டுமே இந்தப் பிரிவில் தொடரப்படும் வழக்குகளை உரிய விசாரணை மேற்கொண்டு ரத்து செய்ய முடியும். ஏனெனில் குற்றத்தின் தன்மை ஆழமாகவும், குற்றவியல் தன்மையோடும் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விடக் கூடும் என்பதன் அடிப்படையில் இது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.




