
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அப்படத்தின் இயக்குனர் பாலா இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால் அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது.
பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, விஷால் இணைந்து நடித்து வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அவதூறாக விமர்சித்ததாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜூன் மாதம் 20-ந்தேதி நடிகர் ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அப்போது, தயாரிப்பாளரான தனக்கும் படத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அதனால் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால் அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நடிகர் ஆர்யா ஆஜராகவில்லை. அதனால் அவர் வரும் 16-ம் தேதி நடக்கும் அடுத்த விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.



