இரண்டு ஆண்டுகளாக பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தலைமைக் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போலீஸ் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (30 வயது). இரு தினங்களுக்கு முன் அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பணப் பையை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றதாகவும், அவனைப் பிடித்து வைத்துள்ளதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, அங்கே விரைந்து வந்த அமைந்தகரை போலீசார் மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. இதுகுறித்து போலீசார் கூறியபோது, சென்னை கோயம்பேடு தலைமை காவலர் பார்த்திபன், ஜெயந்தி என்ற பெண்ணை வைத்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து விஸ்வநாதன் என்பவரிடம் இருந்து பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர்.
விசாரணையில் அவர்கள், ஆண்களை மிரட்டி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறித்து வந்தது தெரியவந்தது. பாலியல் தொழில் மூலம் வருமானம் அதிகரித்ததால், ஜெயந்திக்கு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து அதில் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது
இதை அடுத்து இருவர் மீதும் அமைந்தகரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர்
இந்நிலையில் காவலர் பார்த்திபனை நேற்றிரவு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப் படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்!