காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் போதைப் பொருள் மற்றும் மது விருந்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 160 பேர் விசாரணைக்கு பின்பு விடுவிக்கப் பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தனியார் விடுதியில் நள்ளிரவில் மதுவிருந்தில் கலந்து கொண்ட 160 இளைஞர்களில் சில இளைஞர்களின் பெற்றோர்க்கு உடனே தகவல் தரப்பட்டதும், அவர்கள் நேரடியாக வந்து ஆதாரங்களை கொடுத்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள ஓடர் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசியத் தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையிலான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஓடர் ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
சோதனையில் ரிசார்ட்டில் மது மற்றும் போதைப் பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், இதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்தும், ரிசார்ட்டுக்கு நேரில் வந்தும் பதிவு செய்ததும் தெரியவந்தது.
இவ்வாறு மது விருந்தில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 153 பேரை போலீசார் அழைத்து வந்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணைக்குப் பின்னர், அவரவரின் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
முன்னதாக ரிசார்ட்டில் அழைத்து வரப் பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி மாமல்லபுரத்தில் உள்ள சௌமியா மஹாலில் அடைத்து வைத்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும், கைப் பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் கைப் பற்றியிருந்தனர்.
இவ்வாறு மது விருந்தில் கலந்து கொண்டு பிடிபட்டவர்களில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இருந்ததால், அனைவரையும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மாமல்லபுரத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின்பேரில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் சொகுசு விடுதிக்கு சீல் வைத்தார். மேலும் சொகுசு விடுதியின் ஊழியர்கள் 12 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.