திருபுவனம் ராமலிங்கத்தின் கொலை முஸ்லிம் பயங்கரவாதத்தால் நடைபெற்ற ஒரு ஜிகாத் நடவடிக்கை என்று தேசிய புலனாய்வு முகமை உறுதி செய்துள்ளது.
திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக காவல் துறையின் தீவிர விசாரணை முடிவில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக இருந்த முகமது ஹசன் குத்தூஸ் உட்பட 11 பேரை கைது செய்யப் பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மார்ச் 14ஆம் தேதி என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து கடந்த 30ஆம் தேதி என்.ஐ.ஏ விசாரணையை தொடங்கியது.
முதல் கட்டமாக ராமலிங்கத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறையில் உள்ள 11 பேர் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்நிலையில் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள முகமது ஹசன் குத்தூஸ் வீட்டில் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
பின்னர் மார்க்கெட் வீதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அதன் பின்னர் மீண்டும் குத்தூஸ் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.
பின்னர் கும்பகோணம் மீன் மார்க்கெட், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த பிப்ரவரி 4, 5ஆம் தேதிகளில் வெளியூரில் இருந்து வந்து இந்த அலுவலகங்களில் தங்கியவர்கள் யார், இந்த அமைப்பில் யார் யார் உள்ளனர், அவர்களது முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை கேட்டு குறித்துக் கொண்டனர்.
பின்னர் திருச்சி பாலக்கரையில் செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்தில் என்.ஐ.ஏ கொச்சி ஏஎஸ்பி தலைமையில் 6 பேர் அடங்கிய குழு சோதனை நடத்தியது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை சோதனை நீடித்தது!
இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப்கள், 2 லட்சம் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேசிய புலனாய்வு முகமை தனது முதல்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில்… திருபுவனம் ராமலிங்கத்தின் கொலை சாதாரணமாக நடந்த கொலை அல்ல. நன்கு திட்டமிடப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்ட கொலை. இது முழுக்க முழுக்க மதப் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக நடந்த முஸ்லிம் பயங்கரவாதச் செயல். உள்நோக்கம் கொண்டது.
இந்தக் கொலையானது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலையின் மூலமாக பெரும்பான்மை இந்து சமுதாய மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்க வேண்டும் என்பதும் கொலையாளிகளின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.
இது எங்களின் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட கொலை.
ராமலிங்கத்தை கொலை செய்வதற்காக சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்காக ஆட்களை ஏற்பாடு செய்துள்ளனர். தேவையான ஆயுதங்களை சேகரித்துள்ளனர். தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் சாட்சியங்கள் மூலமாக இது ஒரு “ஜிகாத்” நடவடிக்கை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தேசிய புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!



