
சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி கைது
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினரின் குழந்தை சோம்நாத்(3) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் குற்றவாளியையும், குழந்தையையும் தேடி வந்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினரின் குழந்தை சோம்நாத்(3) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் குற்றவாளியையும், குழந்தையையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் குழந்தையை நேற்று திருப்போரூர் பஸ் பணிமனையில் சென்டிரல் ரெயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து குழந்தையை கடத்திச்சென்ற குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று மாலை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதினர்.
விசாரணையில் அந்த நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபி ரெட்டி(35) என்பதும், கிண்டியில் கூலி வேலை செய்துவந்ததும் குழந்தை கடத்தலில் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட கோபிரெட்டியிடம் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்துக்கு பின் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் குழந்தைகளுக்கு பாதுகாப்பிற்காக அடையாள அட்டை வழங்கப்படும் என சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தெரிவித்தார்.


