அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளால் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.
இன்று முதல் அமைச்சருடனான கூட்டத்துக்குப் பிறகு கொரோனா தொற்று நோய் பரவல் குறித்து தகவல் தெரிவித்த மருத்துவ குழுவினர், சுவாசப் பிரச்சனை வந்த உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்! என்று வலியுறுத்தினர்
முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது மருத்துவ குழு வெளியிட்ட தகவல்கள் …
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம்; அதுபோல் நடக்க உள்ளது. சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஓரிரு நாள் காய்ச்சல் அறிகுறி இருந்தால்கூட மருத்துவமனைக்கு வரவேண்டும். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா குறித்த பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. அதனால் தான் தொற்றும் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
சென்னையில் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. எனினும் அரசு அறிவித்த தளர்வுகளால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. எனவே ஊரடங்கு கடுமையாக்கப் பட வேண்டும் என்று மருத்துவர் குழு தகவல் தெரிவித்தது.
முன்னதாக, நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை முன்னிட்டு, அதனைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளை ஆராய, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுக்கு மருத்துவ குழு பரிந்துரைகளை வழங்கியது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, சிகிச்சை முறை உள்ளிட்ட பரிந்துரைகள் ஆய்வு செய்யப் பட்டன.