திண்டுக்கல்லில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக மநேமக நிர்வாகிகள் 4 மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மத்திய அரசை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 14 வயது சிறுவன் ஒருவனின் உடல் முழுவதும் நாமம் போட்டு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி, இந்து மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தர்மா ஆகியோர் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரில், பேகம்பூரில் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இந்து மதத்தை இழிவு செய்யும் விதமாக சிறுவனின் நெற்றி மற்றும் உடலில் நாமத்தை வரைந்து இந்துவாக அடையாளப்படுத்தி போராட்டத்தில் முன்னிறுத்தி உள்ளனர்.
இதைப் படமெடுத்து இந்துக்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்தோடு பரப்பியும் வருகின்றனர். முஸ்லீம் அமைப்பு நடத்தும் போராட்டத்தில் இந்து மதத்தை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நடைபெற்ற இச்சம்பவம் திட்டமிட்டு இந்து மதத்தை கொச்சை படுத்துவதற்காக அரங்கேற்றப்பட்டுள்ளது.
இது இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் முயற்சியாகும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசில் பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் பேகம்பூரில் முஸ்லிம் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். இது குறித்து நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் யாசர் அராபத், இப்ராஹிம், காதர் மற்றும் பொன்னுசாமி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்